சென்னை: தாங்கள் பயன்படுத்தியப் பொருட்களை வாங்கவும் விற்கவும் பொது மக்கள் ஓஎல்எக்ஸ் என்ற தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற இணைய விற்பனை தளங்களில், இல்லாத பொருட்களை விளம்பரம் செய்வதும், வாங்குது போல ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.
கடந்த சில மாதங்களாக ஒரு கும்பல் நூதன மோசடியில் ஈடுபட்டவருவதாகவும் புகார்கள் எழுந்தன. சென்னை அரும்பாக்கம் ஜெய்நகரைச் சேர்ந்தவர் ராஜன். சமீபத்தில், இவர் இதே போன்ற இணை விற்பனை மோசடியில் ஈடுபட்டு பணத்தை இழந்துள்ளார். இவர், OLX விற்பனை தளத்தில் விற்பனைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட வேகன் ஆர் காரை வாங்க விருப்பம் தெரிவித்து விளம்பரம் கொடுத்திருந்த தீபக் என்பவரை அணுகியுள்ளார்.
காரின் உரிமையாளரும், அதற்கான ஆவணங்களை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி, காரை வாங்கப் பலரும் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளார். அதற்கு தானே காரை வாங்கிக் கொள்வதாக ராஜன் தெரிவித்து, தீபக்கின் வங்கி கணக்கிற்கு ரூ. 10 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அதற்குப் பிறகு ராஜனால் தீபக்கைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதற்கிடையில், அதே வேகன் ஆர் வேறொருவர் பெயரில் விற்பனைக்கு என OLX தளத்தில் விளம்பரப்படுத்தி இருந்ததைப் பார்த்து ராஜன் அந்த நபரைத் தொடர்பு கொண்டு விசாரித்திருக்கிறார். அப்போது அந்த நபர் தான் காரின் உண்மையான உரிமையாளர் என தெரிய வந்தது. 'தீபக் 'என்ற பெயரில் பேசிய நபர், OLX தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கும் கார் உள்ளிட்ட வாகனங்கள், பொருட்களை வாங்குவது போல் அணுகி, அதன் ஆவணங்களை பெற்று, பின்னர் தானே அவைகளின் உரிமையாளர் எனக் கூறி மற்றவர்களிடம் விற்பது போல முன் தொகையை வாங்கிக் கொண்டு மோசடி செய்வது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து, ராஜன் கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன்படி, ராஜன் பண பரிவர்த்தனை செய்த வங்கி கணக்கின் கூகுள் பே எண்ணை வைத்து கோவையைச் சேர்ந்த நரேஷ் என்பவரை அண்ணா நகர் காவல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நரேஷ் மீது இதே போன்ற OLX மோசடி தொடர்பாக கோவை மாநகர காவல் துறையில் ஏழு வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மோசடி கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:கொம்பாடி கண்மாய்க்கு தண்ணீர் தர கோரிய வழக்கு: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!