தமிழ்நாடு

tamil nadu

மகளை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய ஆட்டோ ஓட்டுனர்; வெட்டிக் கொலை செய்த தாய் கைது!

By

Published : Oct 11, 2022, 3:14 PM IST

மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய ஆட்டோ ஓட்டுனரை வெட்டிக் கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Mother
Mother

கடலூர்: குறவன்பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சிவமணியை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சிவமணியின் உடலை கிழக்கு ராமாபுரம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில், கழுத்து அறுபட்ட நிலையில் மீட்டனர். சிவமணியின் ஆட்டோ எஸ்.புதூர் பகுதியில் பள்ளத்தில் கவிழ்த்து விடப்பட்டிருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதுதொடர்பாக கிழக்கு ராமாபுரம் பகுதியில் போலீசார் விசாரணையை மேற்கொண்டபோது, அப்பகுதியைச் சேர்ந்த பெண் சாராய வியாபாரியான வனிதா வீட்டிற்கு சிவமணி அடிக்கடி வந்து செல்வார் என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து வனிதா வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், வனிதாவின் செல்போன் எண்ணை வைத்து அவரை தேட தொடங்கினர். இதையடுத்து நேற்று மாலை கடலூர் அருகே வனிதா பிடிபட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.

12ஆம் வகுப்பு படித்து வந்த வனிதாவின் மகளை, ஆட்டோ ஓட்டுநரான சிவமணி பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்ததாகவும், இதில் வனிதாவின் மகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கியதாகவும் தெரிகிறது. இதனால் சிவமணி மீது ஆத்திரம் கொண்ட வனிதா, அவரை கொல்ல திட்டமிட்டுள்ளார்.

வனிதா, தனது தம்பி வேல்முருகன், அவனது நண்பர் சங்கருடன் சேர்ந்து கோயிலுக்கு செல்வதாக கூறி, சிவமணியின் ஆட்டோவில் சென்றுள்ளனர். பின்னர், கிழக்கு ராமாபுரம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் வைத்து சிவமணியை கழுத்தை அறுத்து கொலை செய்து, உடல் மீது வாழை சருகுகளை போட்டு மூடியுள்ளனர். பிறகு ஆட்டோவை ஓட்டி வந்து, எஸ்.புதூர் என்ற இடத்தில் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்த்து விட்டதாகவும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நேற்றிரவு வனிதாவை கைது செய்த போலீசார், நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த வனிதாவின் தம்பி வேல்முருகன், சங்கர் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். வனிதா பல ஆண்டுகளாக ராமாபுரம் பகுதியில் சாராயம் விற்று வந்த நிலையில், அவர் மீது சாராய விற்பனை தொடர்பாக ஐந்து வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 7 வயது சிறுமியைப்பாலியல் வன்புணர்வுசெய்து கொன்ற 19 வயது இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details