சென்னை: கடந்த 11 ஆம் தேதி வட சென்னை பகுதியில் பல்வேறு தெருக்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிக்கை பெயரில் சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு ஒட்டப்பட்டிருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலம் ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார், இந்த சுவரொட்டியை ஒட்டிய பிலிப்ராஜ் என்பவரை பிடித்து விசாரணை செய்துள்ளார்.
இதுபோன்று முதலமைச்சரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளார். தொடர்ந்து எச்சரித்தும் சுவரொட்டிகளை ஒட்டியதால் எஸ்பிளனேட் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். துறைமுகம் திமுக கிழக்குப் பகுதி செயலாளர் ராஜசேகர் என்பவரும் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து போஸ்டர் ஒட்டிய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிலிப்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். போஸ்டர் ஒட்டும் வேலையை செய்யும் பிலிப்ராஜ் மீது கடந்த 2000 ஆண்டு கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. பிலிப்ராஜிடம் இருந்து ஆயிரக்கணக்கான போஸ்டர்கள் மற்றும் இருசக்கர வாகனம், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த போஸ்டரை யார் ஒட்ட சொன்னார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணை மேற்கொண்டதில் இந்து ஜனநாயக முன்னணியின் சென்னை மாநகரச் செயலாளர் சத்தியநாதன் என்பவர் போஸ்டர்களை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சத்யநாதனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சத்தியநாதன் மீது இரண்டு வழக்குகள் சென்னை காவல் நிலையங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதித்தது தொடர்பாக கேரள கெஸ்ட் ஹவுஸ் தாக்கியது தொடர்பாகவும், இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரது கைதை கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது தொடர்பாகவும் இரு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சத்தியநாதனிடம் விசாரணை மேற்கொண்டதில் பறையர் பேரியக்க தலைவர் சிவகுருநாதன் என்பவர் போஸ்டர்களை சென்னையில் ஒட்ட கொடுத்தது தெரியவந்துள்ளது. போஸ்டரை ஒட்ட கொடுத்த சிவகுருநாதனையும் போலீசார் கைது செய்தனர். இவர் மீது முக்கூட்டு மலையில் ஜாதி கலவரம் விவகாரம் தொடர்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.