தமிழ்நாடு

tamil nadu

கொசு மருந்து குடித்து 3 வயது குழந்தை உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்

By

Published : Oct 12, 2021, 9:28 AM IST

தெரியாமல் கொசு மருந்தைக் குடித்த மூன்று வயது குழந்தை உயிரிழந்தது. குழந்தைக்கு முதலில் சிகிச்சையளித்த தனியார் மருத்துவரைக் கைதுசெய்யவும், உடற்கூராய்வு செய்யாமல் அலட்சியப்படுத்திய அரசு மருத்துவமனைக்கு எதிராகவும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொசு மருந்தை குடித்து 3 வயது குழந்தை இறப்பு
கொசு மருந்தை குடித்து 3 வயது குழந்தை இறப்பு

சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல், பாத்திமா நகர், வெள்ளச்சாமி தெருவைச் சேர்ந்த தமிழரசன் என்பவரது, மூன்று வயது குழந்தை கிஷோர் வீட்டில் ஆல்அவுட் கொசு மருந்தை தவறுதலாகக் குடித்துவிட்டது.

இதனைக்கண்டு பதறிப்போன பெற்றோர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையைக் கொண்டுசென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்கள் எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல அறிவுறுத்தியுள்ளனர். அங்கு மருத்துவம் பெற்றுவந்த குழந்தை மருத்துவம் பலனின்றி உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

உறவினர்கள் போராட்டம்

இந்நிலையில் குழந்தையை முதலில் அழைத்துச் சென்ற தனியார் மருத்துவமனை மருத்துவர் தவறான சிகிச்சை அளித்ததால்தான் குழந்தை உயிர் இறந்திருக்கக்கூடும் என பெற்றோர் தனியார் கிளினிக் மருத்துவர் சுபாஷ் மீது புகார் அளித்துள்ளனர்.

இவர் வேறு ஒரு மருத்துவரின் பதிவு எண்ணை வைத்து மருத்துவர் தொழில் செய்துவருவதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சுபாஷை தேடிவருகின்றனர். தற்போது அவர் நடத்திவரும் சாய் கிளினிக் பூட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடலை எழும்பூர் மருத்துவமனையிலிருந்து 3 மணியளவில் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவந்து காரில் வைத்திருந்தனர்.

தொடர்ந்து உடற்கூராய்வு செய்ய சவக்கிடங்கிற்குள் உடலை எடுத்துச் செல்லாமல் அலட்சியம்காட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 3 மணி நேரத்திற்கு மேலாக ஆகியும் மருத்துவர்கள், காவல் துறையினர் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஜிஎஸ்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் உடலை சவக்கிடங்கிற்கு எடுத்துச் சென்றதால் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனர். முறையற்ற மருத்துவம் அளித்த தனியார் கிளினிக் மருத்துவரைக் கைதுசெய்யவும் உறவினர்கள் போராட்டத்தின்போது கோரிக்கைவைத்தனர்.

இதையும் படிங்க:பயங்கர ஆயுதங்களுடன் இருதரப்பினர் மோதல் - சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details