வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது கொத்தூர் கிராமம். இக்கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் இன்று காலை ஆண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனைப்பார்த்த கிராமத்தினர் உடனடியாக தமிழ்நாடு வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நடந்த இடம் ஆந்திர வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி என்பதால் இரு மாநில வனத் துறை அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்தது ஆண் யானை என்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.