வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குப்பு ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சரவணன், அர்ச்சனா. கல்லூரி பயின்றுவரும் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரது காதல் விவகாரம் குறித்து பெண்ணின் வீட்டிற்கு தெரியவர இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஆறாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இரு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆதலால் இரு வீட்டிலும் பிரச்னை ஏற்பட்டது.
சாதி மறுப்புத் திருமணம்; மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்...!
வேலூர்: சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட மகள் இறந்துவிட்டதாக, தந்தையே பொது இடங்களில் சுவரொட்டி மூலம் அறிவிப்பு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் திருமணம் செய்த சரவணன் மீது ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் அளித்தனர். ஆதலால் சரவணன் - அர்ச்சனா இரு குடும்பத்தினரும் நேற்று சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சமரசம் அடையாத அர்ச்சனாவின் தந்தை மிகுந்த ஆத்திரத்துடன், இவள் தனது மகளே இல்லையென்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். அதன் பின் தன் மகள் இறந்ததாக சுவரொட்டி தயார் செய்து அதை ஊர் நடுவில் ஒட்டியுள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.