தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அமைச்சர் துரைக்கண்ணுவின் இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் ஸ்டாலின்!' - Opposition leader Stalin

திருச்சி: அமைச்சர் துரைக்கண்ணுவின் இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மீது சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

துரைக்கண்ணு மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் கூறியது விஷத்தை தூவும் செயல்
துரைக்கண்ணு மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் கூறியது விஷத்தை தூவும் செயல்

By

Published : Nov 10, 2020, 12:20 PM IST

இது குறித்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 31.10.2020 அன்று இரவு 11.15 மணிக்கு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அதிமுக ஆட்சியில் எந்த ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர் , சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு அமைச்சரின் இறப்பு குறித்து பொய்யான அறிக்கைகள் வெளியிட்டு, மலிவான அரசியலை தொடர்ந்து செய்துகொண்டு வருகிறார்.

மறைந்த வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு , கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12.10.2020 அன்று அனுமதிக்கப்பட்டார். அவருடைய குடும்பத்தினரின் விருப்பத்திற்கு இணங்கவும், அவருக்கு நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் ஆகியவற்றுக்காக ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த காவேரி மருத்துவமனையில் அன்னாரது விருப்பத்தின் பேரில் தொடர் சிகிச்சைக்காக 13.10.2020 அன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டார்.

13.10.2020 முதல் அவருக்கு, உரிய உயர் சிகிச்சைகள், காவேரி மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் குழுவினால் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது.

நானும், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரும், காவேரி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினருடன் இணைந்து பணியாற்றிட அமைக்கப்பட்ட, சென்னை அரசு ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையின் ஒரு சிறப்பு மருத்துவ வல்லுநர் குழுவும், அமைச்சரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்துவந்தோம்.

ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ வல்லுநர் குழுவினரும், தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு சிகிச்சை விவரங்கள் அறிந்து உரிய ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வந்தனர்.

அமைச்சரின் உடல்நலத்தை, முதலமைச்சரும், அமைச்சர்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவக்குழுவினரிடம் விசாரித்தனர்.

உயிர் காக்கும் உயரிய மருந்துகளான ரெமிடிசிவிர், பைபராசிலின் டாசோபாக்டம், டெக்ஸாமெதாசோன், டால்டெபரின், மெரோபெனெம்,

லைன்சோலிட் போன்ற மருந்துகள் அளிக்கப்பட்டதனால், அவரது உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், அவருக்கு தொடர்ந்து அதிக அளவில் பிராணவாயு கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், 24.10.2020லிருந்து அவருக்கு நுரையீரல் பாதிப்பு 90 சதவீதமாக அதிகரித்த காரணத்தினால், பல முக்கிய உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின.

காவேரி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படியும், ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ வல்லுனர் குழுவின் ஆலோசனைப்படியும், அவரின் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் எக்மோ என்ற உயிர்காக்கும் கருவி மூலம் அவரது நுரையீரல் இயக்கப்பட்டது. 25.10.2020 அன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தினால், அவருடைய இருதய துடிப்பு சீர் செய்யப்பட்டு தொடர்ந்து விஏஎக்மோ மூலம் அவருடைய இருதயம் இயக்கப்பட்டது. இதனால், 26.10.2020 மற்றும் 27.10.2020 ஆகிய இரண்டு தினங்களில் அமைச்சரது கண் இமைகள் மற்றும் கை கால்களில் அசைவும் இருந்ததை மருத்துவக்குழுவினர் கண்டறிந்தனர்.

அமைச்சருக்கு பல்வேறு உயர்தர தொடர் சிகிச்சைகள் மருத்துவ வல்லுனர் குழுவினரால் பல்வேறு நிலைகளில் அளிக்கப்பட்டு வந்த போதிலும், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அனைத்து முயற்சிகளும் பலன் அளிக்காமல் 31.10.2020 அன்று இரவு 11.15 மணிக்கு உயிரிழந்தார்.

மேலும், காவேரி மருத்துவமனை நிர்வாகம், அமைச்சரின் சிகிச்சை காலத்தில் அதாவது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து, இறப்பு வரை அன்னாரது உடல்நிலை குறித்த மருத்துவமனை அறிக்கையை, அவ்வப்போது வெளியிட்டு வந்தது. காவேரி மருத்துவமனையும், மறைந்த அமைச்சருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சைகள் குறித்து அதன் இறப்பு அறிக்கையில் விவரமாக கொடுத்துள்ளது.

மேலும், மறைந்த அமைச்சருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான விவரங்களை காவேரி மருத்துவமனையின் பதிவேடுகள் மற்றும் பிற ஆவணங்களை மாநில மேல் முறையீட்டு அலுவலர் (தமிழ்நாடு மருத்துவமனைகள் முறைபடுத்தும் சட்டம்) மற்றும் இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் ஆய்வு செய்து அவர்களுடைய அறிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.

மறைந்த அமைச்சரின் உடல்நிலை பற்றியோ, அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பற்றியோ, அரசோ, மருத்துவமனையோ எதையும் மறைக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் தந்த பொய்யான அறிக்கையின் மீது என்னுடைய விளக்கத்தினையும், அரசு எடுத்த நடவடிக்கைகளையும் நான் எடுத்துக்கூற கடமைப் பட்டுள்ளேன்.

"அரசுக்கு ஒவ்வொரு உயிரும் முக்கியம்” என்ற முதலமைச்சரின் உயரிய நோக்கத்தின் அடிப்படையில் தான் நாங்கள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றோம்.

திமுக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் சிகிச்சையில் இருந்தபோது, உயரிய மருந்துகள் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, உடனடியாக அவருக்கு அரசு தேவையான மருந்துகளை அளித்தது.

கடவுளுக்கு நிகராக பணி செய்கின்ற மருத்துவர்களின் சேவையை கொச்சைப்படுத்தும் விதமாக எதிர்க்கட்சித் தலைவருடைய அறிக்கை அமைந்துள்ளது.

வேளாண்மைத்துறை அமைச்சர் சிகிச்சை பெற்றுவந்த காவேரி மருத்துவமனையில்தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிகிச்சை பெற்றார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அரசியல் செய்ய எத்தனையோ காரணங்கள் இருந்தபோதிலும், அமைச்சரின் இறப்பிலும் அரசியல் லாபம் தேடும் எதிர்க்கட்சித் தலைவரை தமிழ்நாடு பெற்றுள்ளது நமக்கெல்லாம் துரதிருஷ்டம்.அவருடைய இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

மறைந்த அமைச்சரின் இறப்பின்மீது பொய்யான அறிக்கைகளை வெளியிட்ட எதிர்க்கட்சித்தலைவர் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்" எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details