திருச்சி: அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்குத் திருச்சி மட்டுமல்லாது அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
விபத்து, தற்கொலை முயற்சி, தீக்காயங்கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதுடன், அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது.
சுகாதாரக்கேடு தரும் குப்பைக்குவியல்கள்
இந்த நிலையில் அவசர சிகிச்சைப்பிரிவிற்குப் பின்புறமுள்ள பகுதியில், அதிக அளவிலான குப்பைகளும், குளுக்கோஸ் பாட்டில்களும், காலணிகளும், மருத்துவக் கழிவுகளும் நெகிழிப் பைகளில் வைக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாது தரையிலும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களும், ஈக்களும் அதிகளவில் மொய்க்கின்றன.
இதேபோல், எலும்பு முறிவு சிகிச்சை மற்றும் முடநீக்கியல் துறைக்குப் பின்புறமும் சேதமடைந்த படுக்கைகள், தலையணைகள் மற்றும் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது.
பொங்கல் விடுமுறையால் குப்பை அகற்றும் பணிகளில் தொய்வு
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த மேலாளரிடம் கேட்டபோது, பொங்கல் விடுமுறை காரணமாக குப்பைகளை அள்ள மாநகராட்சி வாகனங்கள் வரவில்லை என்றும்; நேற்று வந்து குறைந்த அளவிலான குப்பைகள் எடுக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் குப்பைகளை அப்புறப்படுத்தி வருவதாகவும், விரைந்து முழுவதும் அகற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
கரோனா தொற்று, ஒமைக்ரான் தொற்றுகளுக்கு இடையே டெங்கு காய்ச்சல் வேகமாகப்பரவக்கூடிய நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவக்கழிவுகள் குவியல் குவியலாகச் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களிடையே நோய்த்தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
குப்பைகளை அகற்றக் கோரிக்கை இதையும் படிங்க: சட்டக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தேவை - திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்