வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, திமுகவிற்கு அடுத்த மூன்றாவது அணியாக அமமுக தலைமையிலான கூட்டணி உருவெடுத்துள்ளது. கடந்த முறை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இத்தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். அதன்படி, இன்று அவர், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியான சங்கரநாராயணனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ”தீய சக்தியையும், துரோக சக்தியையும் தேர்தலில் இருந்து அகற்ற வேண்டும். ஏற்கனவே நிதிச்சுமையில் தமிழகம் இருக்கும்போது, இலவச வாஷிங் மெஷின், பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது. எங்களது தேர்தல் வாக்குறுதியாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்று கூறியுள்ளோம்.