தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 2, 2021, 6:02 PM IST

ETV Bharat / city

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் வேதனை

தூத்துக்குடி: அதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வின் காரணமாக வாகனங்களில் காய்கறி மூட்டை ஒன்றிற்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், காய்கறிகளின் விலையும் தற்போது உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வின் தாக்கம் காய்கறிகள் விற்பனையில் பிரதிபலிப்பு
அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வின் தாக்கம் காய்கறிகள் விற்பனையில் பிரதிபலிப்பு

சுதந்திரத்திற்குப்பின் இந்தியாவின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் பொருட்டு, அப்போதைய பிரதமர் நேரு தலைமையிலான அரசு ஐந்தாண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயம் உள்ளிட்டவற்றில் தொழில் புரட்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்தும் ஐந்தாண்டு திட்டங்கள் தொடர்ந்து வகுக்கப்பட்டு, நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிக்கோலிடப்பட்டது. இந்த நடைமுறை தற்போது வரையிலும் நீடித்து வருகிறது.

காலத்தின் மாற்றத்திற்கேற்ப நாட்டின் வளர்ச்சியும், திட்டங்களும், அதை சார்ந்த தேவைகளும் அதிகரித்து வருகின்றன. நாட்டில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கம், அதி நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, நான்காம் தலைமுறையைத் தொடர்ந்து ஐந்தாம் தலைமுறை இணைய வேகம் உள்ளிட்டவை அடுத்தடுத்து இந்தியாவின் சந்தையை சர்வதேச நிலைக்குத் தரம் உயர்த்திக் கொண்டிருக்கின்ற வேளையில், பெட்ரோல்-டீசல் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: காய்கறிகளின் விலையும் அதிகரிப்பு

வாகனப் பெருக்கத்தின் காரணமாக இந்தியச் சந்தையில் எரிபொருள் தேவை அதிகமாகி உள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் கச்சா எண்ணெய்யை டாலர்கள் விலையில் இந்தியாவுக்கு பேரல்களில் அடைத்து அனுப்புகின்றன. இவை நமது நாட்டின் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையின் மூலமாகப் பிரித்தெடுக்கப்பட்டு பெட்ரோல், டீசலாக சந்தைப்படுத்தப்படுகிறது. இவ்வாறு சந்தைப்படுத்தப்படும் எரிபொருளுக்கு அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே 15 நாட்களுக்கு ஒருமுறை விலையை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

காய்கறிகள் விலை அதிகரிப்பால் பரிதவிக்கும் நுகர்வோர்

பெட்ரோல் நிலையங்களில் விற்கப்படும் எரிபொருளுக்கு அடிப்படை விலையைத் தவிர, மத்திய அரசின் பங்கு, மாநில அரசின் பங்கு மற்றும் விற்பனையாளரின் பங்கு ஆகியவை அடங்கிய மொத்த விலையிலேயே ஒரு லிட்டர் எரிபொருள் நுகர்வோர்களுக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறாக சந்தையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 93 ரூபாயாகவும், டீசல் விலை 86 ரூபாயாகவும் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு லிட்டர் பெட்ரோல் 73 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் அதன் விலை மெல்ல மெல்ல அதிகரித்து தற்போது 90 ரூபாயைத் தாண்டி நிற்கிறது.

காய்கறிகளின் விலை உயர்வால் சொல்வதறியாது தவிக்கும் வியாபாரிகள்

நாட்டின் சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்து உள்ளதையும், இந்த தருணம் நாம் நினைவுகூற வேண்டியிருக்கிறது. இன்று அவசர தேவைகள் முதல் அருகே இருக்கும் கடைக்கு செல்வதற்குக்கூட, நாம் இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தும் நிலைக்கு மாறி இருக்கிறோம். எனவே, எரிபொருளின் தேவை என்பது இன்றியமையாத ஒன்றாக மாறி உள்ளது. அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பது போல அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அரசின் பொறுப்பே.

ஆனால், இன்று அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை சாமானிய மக்களின் வாழ்க்கையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக மாறி உள்ளது. இன்று உணவுத் தேவைக்காக காய்கறிகள் வாங்குவது தினசரி வாடிக்கைகளில் ஒன்று. காய்கறிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வதற்கு வாகனங்கள், சரக்கு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காய்கறிச் சந்தை

அதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலையானது காய்கறிகள் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து கள ஆய்வு செய்து அறிக்கை தர ஈடிவி பாரத் விரும்பியது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கள ஆய்வு செய்ய நேர்கையில் வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகரித்துவரும் காய்கறி விலை உயர்வு குறித்து நம்மிடையே மனம்திறந்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

அதன்படி விவசாயி வரதராஜன் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகாவைச் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் மானாவாரி பயிர் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உளுந்து, பாசி, கம்பு, தினை, சோளம் இதுதவிர மிளகாய் வத்தல், கத்தரிக்காய் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் விவசாய விளைபொருள்களை கொள்முதல் செய்ய ஆங்காங்கே அரசு சார்பில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும், அவைகள் போதுமான அளவு இல்லை.

எனவே, விளைபொருள்களை சேமித்து வைக்க பெரும்பாலும் தனியார் பதப்படுத்தும் உணவு கிடங்குகளையே நம்பி இருக்க வேண்டி இருக்கிறது. தனியார் உணவுபதப்படுத்தும் கிடங்குகள் விளாத்திகுளத்தில் இருந்து நெடுந்தொலைவில் அமைந்துள்ளன. குறிப்பாக கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகியப்பகுதிகளுக்கு விளைபொருள்களை கொண்டுவந்து சேமிக்கும் நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இதற்கு ஆகும் வண்டி செலவு, நேர விரயம் ஆகியவை காய்கறி விளைபொருட்களின் விலையில் பிரதிபலிக்கிறது.

விவசாயத்திற்கு செய்த முதலீடு முதல் பொருட்களை சந்தைப்படுத்தும் வரை விவசாயிக்கு ஆகும் செலவைக் கருத்தில் கொண்டு விளைபொருளுக்கு விலையைத் தீர்மானிக்கிறோம். ஆனால், கொள்முதல் நிலையங்களில் விற்பனை முகவர்கள் சொல்லும் அடிமாட்டு விலைக்கு எங்களது விளைபொருள்களை கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிக்கு உரிய லாபம் கிடைக்காமல் போகிறது. எனவே, விவசாயின் முதல் தேவையாக உணவு பதப்படுத்தும் கிடங்குகளை போதுமான அளவு இப்பகுதியில் அமைத்திட வேண்டும். இதனால் விவசாயிகள் தங்களது பொருள்களை உற்பத்தி நிலையிலேயே சேமித்து வைக்க முடியும்.

மேலும் நேரடி அரசின் நேரடிக்கொள்முதல் மூலமாக விளைபொருளுக்கு ஆதார விலை கிடைப்பதற்கும், விவசாயிக்கு நியாயமான லாபம் கிட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியும்" என்று தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: காய்கறிகள் விலை அதிகரிப்பு

காய்கறிகள் விற்பனை விலை உயர்வு குறித்து தூத்துக்குடி காமராஜர் சந்தை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கையில், "சமீபகாலமாக காய்கறிகள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. குறிப்பாக சின்ன வெங்காயம், பல்லாரி விலை உயர்ந்துள்ளது. இதற்குக்காரணம் சமீபத்தில் பெய்த பருவ மழையினால் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்டிருந்த சின்னவெங்காயம் போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகியதே காரணம். எனவே, சின்ன வெங்காயத்தின் விலை உச்சாணியில் இருந்துகொண்டிருக்கிறது.

இதுபோக தற்பொழுது கறிவேப்பிலையின் விலையும் உயர்ந்துள்ளது. காய்கறிகள் வாங்கிய பின்பு, இறுதியில் இலவச இணைப்பாக கறிவேப்பிலை மற்றும் மல்லித்தழைகளை கொடுத்து வந்த நிலையில், தற்பொழுது அதை வாடிக்கையாளர்களுக்குத் தர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

கறிவேப்பிலை தற்பொழுது கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பொதுவாக தூத்துக்குடி சந்தைக்கு ஒட்டன்சத்திரம், பழனி, ஈரோடு, மதுரை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து லாரிகளில் சரக்குகள் கொண்டு வரப்படுகின்றன. சமீபத்தில் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக மூட்டை ஒன்றுக்கு பத்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த செலவை ஈடுகட்டுவதற்கு நாங்கள் காய்கறி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் வெளியூர் சந்தைகளில் காய்கறிகளுக்கு என்ன விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ... அதையே இங்கும் நிர்ணயித்து விற்பனை செய்துவருகிறோம். புதிதாக சின்ன வெங்காயப்பயிர்கள் பயிரிடப்பட்டு, அவை அறுவடை செய்து சந்தைப்படுத்தும்பொழுதுதான் சின்ன வெங்காயத்தின் விலை கீழிறங்கும். சின்ன வெங்காயத்தின் விலை இயல்புநிலைக்கு வர இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் ஆகலாம்.

வியாபாரத்தைப் பொறுத்தவரையிலும் முன்புபோல் காய்கறி விற்பனை நடைபெறுவதில்லை. காய்கறிகளை மொத்தமாக வாங்கி வைத்து பயன்படுத்தியவர்கள்கூட, இன்றைய விலைவாசி உயர்வின் காரணமாக, தேவைக்கு மட்டும் காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர்.

இதனால் வியாபாரத்தில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது. முகூர்த்த நாள்கள், விழா நாட்களில் மட்டுமே காய்கறிகள் மொத்த விற்பனை நடைபெறும். அதில்தான் வியாபாரிகள் சற்று லாபம் பார்க்க முடியும்.

சில்லறை வணிகத்தில் அவ்வளவு லாபம் ஈட்ட முடியாது. எனவே, காய்கறி விற்பனையாளர்களின் நிலையும் இந்த விலைவாசி உயர்வின் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் தங்களின் தேவைக்கேற்ப காய்கறிகளை வாங்க பழகிக்கொண்டதனால் விற்பனையிலும் மந்த நிலையே நீடிக்கிறது" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உயிரைக் காக்கும் தலைக்கவசம்: அனைவருக்கும் அவசியம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details