தமிழ்நாடு

tamil nadu

சாத்தான்குளம் கொலை வழக்கு: மூன்று காவலர்களுக்கு ஆகஸ்ட் 5 வரை நீதிமன்றக் காவல்!

By

Published : Jul 22, 2020, 7:45 PM IST

சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்த இரு சிபிஐ அலுவலர்களுக்கு கரோனா தொற்று காரணமாக, கைதான மூன்று காவலர்களிடம் அவசர அவசரமாக விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

sathankulam case
sathankulam case

மதுரை: சாத்தான்குளம் கொலை வழக்கில் ஏற்கனவே காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஐந்து காவல் துறையினரை மூன்று நாள்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்திய நிலையில், வழக்கில் இரண்டாம் கட்டமாக கைதுசெய்யப்பட்ட காவலர்கள் செல்லதுரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரை 23ஆம் தேதிவரை சிபிஐ காவலில் விசாரிக்க மதுரை மாவட்ட தலைமை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இச்சூழலில் மூன்று காவலர்களையும் ஜூலை 21ஆம் தேதி சாத்தான்குளம் காவல் நிலையம், பென்னிக்ஸ் கடை அமைந்திருந்த பகுதிகளுக்கு நேரில் அழைத்துச் சென்று சிபிஐ காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இரவில் மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு மூன்று பேரையும் அழைத்து வந்தனர்.

சாத்தான்குளம் விவகாரம்: மாவட்ட நிர்வாகத்திற்கு நோட்டீஸ்!

இதற்கிடையே சிபிஐ குழுவில் இடம்பெற்றிருந்த இருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், இன்று காலை வாக்குமூலங்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்றதைத் தொடர்ந்து காவல் துறையினர் மூன்று பேரையும் மதுரை மாவட்டத் தலைமை நீதிமன்ற நீதிபதி ஹேமானந்த குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தபட்டதையடுத்து, மூவருக்கும் ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து மூன்று பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே மூன்று காவலர்களையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நிலையில், கரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக ஒரு நாளுக்கு முன்பாகவே ஆஜர்படுத்தபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நேற்றைய தினம் சாத்தான்குளத்திற்கு மூன்று காவலர்களையும் அழைத்துச் சென்றபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து சிபிஐ அலுவலர்களுக்கும், பாதுகாப்பிற்குச் சென்ற காவலர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது.

சாத்தான்குளம் கொலை வழக்கு : கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

மேலும் சிபிஐ விசாரணையின்போது ஆஜரான காவலர்களுக்கும், பென்னிக்ஸ் குடும்பத்தினர், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய காவலர்கள் உள்ளிட்ட சிபிஐ அலுவலர்களோடு தொடர்பிலிருந்த அனைவருக்கும் பரிசோதனை நடத்த வாய்ப்புள்ளது. இதனையடுத்து வழக்கு தொடர்பாக சிபிஐ காவல் துறையினரின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details