விருதுநகர் மாவட்டம் பரளச்சி கிராமத்தை சேர்ந்த சோலையம்மாள், தனது மகன் ரமேஷ் அரவிந்துடன் விளாத்திகுளம் அருகேயுள்ள கோடாங்கிபட்டியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு நேற்றிரவு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட எல்லையான கீழ அருணாசலபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, நடு சாலையில் ஒருவர் கிடந்துள்ளார். அவருக்கு அருகில் 2 பைக்குகளோடு சிலர் நின்றுள்ளனர். இதனைப் பார்த்த தாயும், மகனும் விபத்து எனக் கருதி, தரையில் கிடந்தவரிடம் விசாரித்துக் கொண்டிருக்கையில், அருகில் நின்றிருந்தவர்கள் அரிவாளால் தாயையும் மகனையும் தாக்கியுள்ளனர்.
பின்னர், சோலையம்மாள் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தாலிச் சங்கிலி, 8 கிராம் கம்மல் ஆகிவற்றை பறித்த அக்கும்பல், ரமேஷ் வைத்திருந்த செல்ஃபோனையும் பறித்து தப்பியோடியுள்ளது. ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்த இச்சதியால் அதிர்ச்சி அடைந்த இருவரும் செய்வதறியாமல் திகைத்து போய் நின்றுள்ளனர்.