தூத்துக்குடி: கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு, வேள்விபூஜை மன்ற கருவறை தாமரைப்பீடம் திறப்பு விழா நேற்று (மே. 29) நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்த பிரதமர் 21,000 ஆயிரம் கோடி ரூபாயில் ஆன பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அவர் தொடங்கி வைத்த திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள்.
பாரத பிரதமர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்து வைப்பதற்கு வருகை புரிவது வழக்கம். அதேபோலத்தான் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். குறிப்பாக தற்போது பாரதப் பிரதமர் தொடங்கி வைத்துள்ள திட்டங்கள் அனைத்தும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அடித்தளமிடப்பட்டது.
சென்னை மதுரவாயல் பறக்கும் இருவழி சாலை திட்டம் திமுக கொண்டுவந்தாலும் 2006 - 11 காலகட்டங்களில் நில எடுப்பு பிரச்சனை காரணமாக அத்திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. அதிமுக ஆட்சிகாலத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவுற்று மதுரவாயல் துறைமுகம் பறக்கும் புறவழிச்சாலை திட்டத்திற்கு மீண்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2020 இல் அதற்கான பணி தொடங்க தற்போது பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.