தூத்துக்குடி: கோவில்பட்டி உட்கோட்டத்திற்கு கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு, எட்டயபுரம் வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
காத்திருந்த விவசாயிகள்:இதனையடுத்து காலை 9:30 மணி முதல் விவசாயிகள், கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டனர். காலை 10:30 மணிக்கு மேல் கோட்டாச்சியர் நேர்முக உதவியாளர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், வேளாண் உதவி இயக்குநர் ஆகியோர் கூட்டத்தை தொடங்குவதாகக் கூறினர். அப்போது அங்கிருந்த விவசாயிகள், கோட்டாட்சியர் தலைமையில் தான் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 11.30 மணியை நெருங்கிய நிலையிலும் கோட்டாட்சியர் இதுவரை கூட்டத்துக்கு வரவில்லை என கூறி அதிகாரிகள் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கூட்டம் நடைபெறும் இடத்தில் 20-க்கும் குறைவான இருக்கைகளே உள்ளன. நாங்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்று கொண்டு இருக்கிறோம் என குற்றம் சாட்டினர்.
திணறிய அரசு அதிகாரிகள்:'இதோ, கோட்டாட்சியர் விரைவில் வந்து விடுவார்; உங்களது குறைகளை தெரிவிக்கவும்.. மனுக்களை கொடுக்கவும்..' என அதிகாரிகள் கூறிய நிலையில், கோட்டாட்சியர் நேரில் வந்து பதில் கூறும் வரை மனுக்களையும் வழங்க மாட்டோம் குறைகளை தெரிவிக்க மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர். இதனால், கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழப்பம் ஏற்பட்டது.