தூத்துக்குடி:திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவதற்காக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழ்நாட்டில் திமுக அரசு கட்டுப்பணம், கமிஷன் பணம், கரப்ஷன் பணம் என மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. ஒரு திட்டம் சார்ந்து நடைபெறும் வேலைகளில் 20% கமிஷன் கேட்கிறார்கள், முடிக்கப்பட்ட பணிகளுக்கு தொகை ஒதுக்கீடு செய்ய 4% கமிஷன் கேட்கிறார்கள்.
இவை அனைத்தையும் தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் மட்டுமே அனுபவிப்பதற்கு ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் இந்த ஊழல்கள் மேல்மட்டத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. எனவே கட்சியை சேர்ந்த வட்ட செயலாளர், கிளை கழக செயலாளர், தொண்டர்கள் யாரும் களத்தில் மக்கள் பணி செய்வதற்கு முன்வரவில்லை. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஊழல்கள் பற்றி இன்னும் நான்கு மாதங்களில் தமிழ் மக்களே பேசத் தொடங்குவார்கள். அவர்களே அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் நிலை உருவாகும்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, வீடு தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை, வேறு பெயரில் திமுகவினர் மாநில அரசின் திட்டங்களை போல செயல்படுத்துகின்றனர். எந்த ஒரு திட்டத்தையும் அறிவார்ந்து யோசித்து, புதிதாக மக்களுக்கு செயல்படுத்தும் திறன் திமுக அரசிடம் இருப்பதாக தெரியவில்லை. ஒன்றிய அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு கொடுக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டுவரும் நிலையில், தமிழ்நாட்டில் திமுக அரசு அதிலும் கமிஷன் எதிர்பார்க்கின்றனர்.