தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மனித கடத்தல் தடுப்பு பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு இருசக்கர வாகனங்களை காவலர்களுக்கு வழங்கினார்.
பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி அப்போது அவர் கூறியதாவது, "தூத்துக்குடி மாவட்டத்தில் மனித கடத்தலை தடுக்கும் பொருட்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி, காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், இரண்டாம் நிலை காவலர்கள் ஆகியோர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.
பெண் காவலர்கள் மனித கடத்தலை தடுப்பது சம்பந்தமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக சிறுவர், சிறுமிகள், பெண் குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தனியார் கல்லூரிகள், நிறுவனங்களில் பெண் காவலர்கள் அடிக்கடி ரோந்து சென்று பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலணிகள் வழங்கிய காவலர்கள்