திருநெல்வேலி:பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரசர்களால் பிரம்மாண்டமாக கோட்டைகள் கட்டப்பட்டன. போர் காலங்களில் பாதுகாப்புக்காகவும், அரச அலுவல்களுக்கும் கோட்டைக்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த கோட்டைகள் காலப்போக்கில் பராமரிப்பின்றி அழிந்துவருகின்றன. பல அழிந்துவிட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு, பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டையும் அழிந்துவிட்ட நிலையில் அதன் 2 வாயில்கள் மட்டும் இன்றளவும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன.
இக்கோட்டை கி.பி. 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் பல்வேறு வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. திருநெல்வேலியில் குறிப்பாக, 'பாளையங்கோட்டை' என்ற ஊருக்கு பெயர் வர முக்கிய காரணமே இந்த கோட்டை தான். பாண்டிய மன்னர்களுக்கு பிறகு, பாளையக்காரர்கள் இந்த கோட்டையை கைப்பற்றினர். இதனால் பாளையங்கோட்டை எனப் பெயர்பெற்றது.
இறுதியாக, தீர்த்தாரப்ப முதலியார் என்ற அரசரிடம் இருந்து ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையைக் கைப்பற்றினர். ஆங்கிலேயர்கள் தங்களின் ஆயுதக் கிடங்காகவும், சிறைச்சாலையாகவும், இக்கோட்டையை பயன்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக, விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை, இந்த கோட்டையின் கிழக்கு வாசல் என்று கூறப்படும் தற்போதைய அரசு அருங்காட்சியகத்தில்தான் ஆங்கிலேயர்களால் சிறை வைக்கப்பட்டார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் போர்ப்படை தளபதியாக இருந்த ஊமைத்துரையை சிறை வைத்திருந்தபோது, ஆங்கிலேயர்கள் கட்டபொம்மனை தூக்கிலிட்டப் பிறகு, இங்கு சிறையிலிருந்த படியே அவர் மருது சகோதரர்களின் உதவியை நாடினார். அதன்படி அப்போது சன்னியாசிகள் வேடத்தில் கைதிகளுக்கு அம்மை நோய்க்கு வைத்தியம் பார்ப்பதுபோல் நுழைந்த சிலர், கோட்டையிலிருந்து ஊமைத்துரையை தப்பிக்க வைத்ததாக வரலாறு உண்டு.
ஊமைத்துரை சிறை வைக்கப்பட்டிருந்த அறை இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், அவரது சிறை அனுபவம் குறித்து அரசு அருங்காட்சியகத்தில் எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல, கோட்டையின் மேற்கு வாசல் என்று அழைக்கப்பட்ட பாளையங்கோட்டை மேடை காவல்நிலையம், தற்போது அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த மேற்கு வாசலிலும் பிரம்மாண்டமான செங்குத்தாக இருபுறங்களிலும் படிக்கட்டுகளைக் கொண்ட சிறையொன்றும் உள்ளது. கற்களாலான சுற்றுச் சுவர்கள் இன்றும் அவற்றின் கம்பீரம் குறைய விடாமல் காக்கின்றன. இதன் உள்ளே உள்ள துளையொன்று வெளியிலிருந்து வரும் எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஏதுவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டை மேடை காவல்நிலையம் செயல்பட்ட நிலையில், பாதுகாப்பாக பராமரிக்கப்பட்ட மேற்கு கோட்டைவாசல் தற்போது, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி இருந்தனர். பாரம்பரிய மிக்க இந்த மேற்கு கோட்டைவாசலை சமூக விரோதிகளிடமிருந்து மீட்டு, முறையாக பராமரித்து வரலாற்று நினைவிடமாக மாற்ற வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் எனப் பல தரப்பினரும் கோரிக்கை வைத்து இருந்தனர். இதன் பலனாக, திருநெல்வேலி மாநகராட்சி 'சீர்மிகு நகர் திட்டம்' மூலம் சுமார் 5 கோடி மதிப்பீட்டில் கடந்தாண்டு இப்பணியை தொடங்கினர்.