நெல்லை: நெல்லை மாவட்டம், வீரவநல்லூரைச் சேர்ந்த மைதீன் பிச்சை(55) என்பவர், வீரவநல்லூர் மெயின் பஜாரில் நகை கடை நடத்தி வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு, மைதீன் பிச்சை வழக்கம்போல் இரவு கடையை அடைத்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச்சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வழி மறித்த அடையாளம் தெரியாதநபர்கள், அரிவாளால் வெட்டிவிட்டு, அவர் வைத்திருந்த 5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்றனர். இந்தச்சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உடனடியாக விசாரணையில் இறங்கினார். மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாரி ராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.