தமிழ்நாடு

tamil nadu

நெல்லையில் தொடர் மழை: பாபநாசம் அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு

By

Published : Nov 14, 2021, 9:34 AM IST

நெல்லையில் தொடர் மழை பெய்துவருவதால் பிரதான அணைகள் வேகமாக நிரம்பிவரும் நிலையில் பாபநாசம் கடனா அணையிலிருந்து 11 ஆயிரம் கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

பாபநாசம் அணை, தாமிரபரணி
பாபநாசம் அணை

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் நேற்று காலை முதல் மழை பெய்துவருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தொடர்ந்து வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில் நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு ஆகியவை வேகமாக நிரம்பிவருகின்றன. நேற்று (நவ. 13) காலை நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 138 அடி நீரும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 86 அடி நீரும் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தாமிரபரணி

இந்த நிலையில் பாதுகாப்பு கருதி தற்போது பாபநாசம் அணையிலிருந்து 10,100 கன அடி நீரும் தென்காசி மாவட்டம் கடனா அணையிலிருந்து 930 கன அடி நீரும் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

அதேபோல் கொடுமுடியாறு அணை முழுவதும் நிரம்பி உள்ளதால் அங்கிருந்து 1200 கன அடி நீர் நம்பியாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது எனவே தாமிரபரணி, நம்பியாறு கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல் ஆற்றின் அருகில் சென்று பொதுமக்கள் செல்ஃபி எடுக்கவோ குளிக்கவோ வேடிக்கை பார்க்கவோ வேண்டாம் என ஆட்சியர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

தாமிரபரணி

இதற்கிடையில் தாமிரபரணி ஆற்றில் சுமார் 11000 அடி கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் இன்று (நவ. 14) காலை நெல்லை மாநகரின் பல்வேறு இடங்களில் கரையோரப் பகுதிகளில் லேசான பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

மழையால் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக 24 மணி நேரமும் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையில் 1077, 0462 2501012, 0462 2501070 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:உழவருக்கு உடனடி நிவாரணம் - ஸ்டாலின் உறுதி

ABOUT THE AUTHOR

...view details