சேலம்சூரமங்கலம் பகுதியில் உள்ள ரேடிசன் ஹோட்டலில் இன்று (ஆக.10) நடந்த தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் இன்று நடந்தது.
பின்னர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'கரோனா தொற்று முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப்பின்னர் தற்போது தான் தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் வருகிறது. இந்தக் கூட்டத்தின் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி, முதலமைச்சருக்கு தெரிவிக்க இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் உரிமத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை லைசென்ஸ் புதுப்பிக்க கேட்டுள்ளோம். இதேபோல, சினிமா ஆபரேட்டர்களாக, டிப்ளமோ படித்தவர்களை பணியில் அமர்த்த அனுமதி கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
தியேட்டருக்குப் பிறகே ஓடிடி:தமிழ்நாட்டில் சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை. முன்னணி நடிகர் அமீர்கான் தனது படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 6 மாதங்களுக்குப் பிறகே, ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். இதனை வரவேற்கிறோம். தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்கள் இதேபோல தங்களது படங்களை தியேட்டர் ரிலீஸுக்குப் பிறகு, 8 வாரங்கள் கழித்து வெளியிட வேண்டும். இதற்காக நடிகர்கள் தங்கள் படம் ஒப்பந்தம் போடும்போது ஓடிடி தளத்தில் எப்போது வெளியிட வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.
பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் டிக்கெட் கட்டணம் ரூ.500 முதல் 800 வரை உள்ளநிலையில், தமிழ்நாட்டில் தான் டிக்கெட் கட்டணம் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் தான் அதிகபட்ச கட்டணம் 190 ரூபாயாக உள்ளது.