தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 25, 2019, 12:38 PM IST

ETV Bharat / city

பிளாஸ்டிக் மறுசுழற்சியில் செங்கல்! பிரமிப்பை ஏற்படுத்தும் பயன்கள்!

சேலம்: தனியார் கல்லூரி ஒன்றில், மக்களோடு ஒன்றிப்போன நெகிழிப்பொருட்களை மறு சுழற்சி செய்து பிளாஸ்டிக் செங்கலை வடிவமைத்துள்ளனர். பிளாஸ்டிக் செங்கலா என்று ஆச்சரியப்படும் நமக்கு இன்னும் பல சுவாராஸ்யமான தகவல்களும் பயன்களும் காத்திருக்கிறது. அதை பற்றிய செய்தி தொகுப்பை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

பிளாஸ்டிக் மறுசுழற்சியில் செங்கல்

நிலம், நீர், காற்று ஆகியவற்றில் அதி உச்ச மாசுபாட்டை ஏற்படுத்துவதில் நெகிழி முதலிடம் வகிக்கிறது. வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டு மக்களின் அன்றாட பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்ட நெகிழி, இந்தியாவின் மக்கள் பயன்பாட்டில் இன்னமும் இருப்பது மிகப்பெரிய சாபக்கேடு என்கிறார்கள் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள். இதனைக் கருத்தில் கொண்டுதான் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பைகளின் பயன்பாட்டிற்கும் உற்பத்திக்கும் இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் தடை விதித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனாலும் நெகிழி பயன்பாடு இன்றளவும் அறவே ஒழிக்கப்படவில்லை என்பது எதார்த்தம். இந்த சிக்கலில் இருந்து மீள்வதற்கான வழி, நெகிழிப் பொருட்களை மறுசுழற்சி செய்து வெவ்வேறு வடிவங்களில் மக்கள் பயன்பாட்டிற்கான பொருட்களாக தருவதே என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து வடிவமைக்கப்பட்ட செங்கல்

அந்த வகையில் சேலம் சூரமங்கலத்தில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் பிளாஸ்டிக் மறு சுழற்சி பொருட்கள் உற்பத்தியில் முன்னோடியாக திகழ்கிறது. குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை தூள் தூளாக்கி கூழ் போல செய்து மீண்டும் அவற்றிலிருந்து மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை வடிவமைத்து சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் சேலம் சூரமங்கலம் தனியார் கல்லூரி வெற்றியும் கண்டிருக்கிறது.

பேராசிரியை ஆர். மாலதி பேட்டி

இதுகுறித்து அந்த கல்லூரியின் கட்டட பொறியாளர் துறை பேராசிரியை ஆர். மாலதி கூறுகையில், "அன்றாட பயன்பாட்டில் ஒன்றிக் கலந்துவிட்ட பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி மூலம் மீண்டும் வேறுவித பொருட்களாக மாற்றி பயன்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அந்த வகையில் பெட் பாட்டில்கள் எனப்படும் பிளாஸ்டிக்கை தூள் தூளாக செய்து அவற்றுடன் மணல் சிமெண்ட் ஆகியவற்றை சேர்த்து 'பிரிக்ஸ்' செங்கல்கள் உருவாக்க முடியும். இதை வெற்றிகரமாக நாங்கள் செய்து அதற்கான அறிவுசார் காப்புரிமை பெற விண்ணப்பித்து இருக்கிறோம். இந்த பிளாஸ்டிக் பிரிட்ஜ், செங்கற்களைப் போன்று உறுதியானது. அதேநேரத்தில் சுற்றுப்புறச் சூழலுக்கும் கேடு விளைவிக்காதது." என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த புதிய வகை பிளாஸ்டிக் பிரிக்ஸ் மூலம் குறைந்த பணச்செலவில் அழகிய வீடுகள், மிகப்பெரிய அலுவலக கட்டடங்கள் கட்டலாம். பிளாஸ்டிக் பிரிக்ஸ் உருவாக்குவதற்காக சிமெண்ட் மணல் ஆகியவற்றின் அளவும் மிகக் குறைந்த அளவே போதுமானது. இந்த பிளாஸ்டிக் பிரிக்ஸ் வெயில் காலத்தில் உருகாத தன்மை கொண்டது. மழை காலத்திலும் அதிக பனி பெய்யும் நேரத்திலும் இது எந்த வகை பாதிப்பையும் தராது. அதேபோல நில நடுக்கம் வாய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளிலும் பிளாஸ்டிக் பிரிக்ஸ் மூலம் கட்டப்படும் கட்டடங்கள் சேதம் அடையாது என்பது கூடுதல் சிறப்பு. 'பேடன்ட் ரைட்' கிடைத்ததும் பிளாஸ்டிக் பிரிக்ஸ் உற்பத்தியை அதிகப்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்காக சந்தைப்படுத்தவும் திட்டமிட்டு இருக்கிறோம் " என்றும் தெரிவித்தார்.

மக்களின் அத்தியவாசிய தேவைகளில் ஒன்றான குடியிருப்பு முதன்மையானது. வீடு என்பதன் அவசியத்தை அத்தியாவசியத்தை உணர்ந்துதான் மத்திய, மாநில அரசுகள் மானிய விலையில் வீடுகள் கட்ட கடனுதவி வழங்கி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகின்றன. இந்த நிலையில் இதுபோன்ற மறுசுழற்சி பிளாஸ்டிக் பிரிக்ஸ் கண்டுபிடிப்பு, 'எட்டாக்கனியாக இருக்கும் வீடு' என்ற கனவை ஏழை எளிய மக்களுக்கு நனவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் படிங்க:

"எனக்கு இயற்கை வியாபாரம்; இணையம் விளம்பரம்" - அசத்தும் 90'ஸ் கிட்ஸ் மங்கை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details