சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா விளங்குகிறது. இந்த வன உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்காக யானை, மான், முதலை, பாம்பு, பறவை வகைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக மதுரை கள்ளழகர் கோயிலில் இருந்து 2009ஆம் ஆண்டு ஆண்டாள் என்ற யானை இந்த உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த யானையை பொள்ளாச்சிப் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் பராமரித்துவந்தார்.
ஏற்கனவே மதுரை கள்ளழகர் கோயிலில் மூன்று பேரை தாக்கி கொன்ற ஆண்டாள் யானை, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில், 2013ஆம் ஆண்டு பத்மினி என்கிற பெண்ணை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். மேலும் யானைக்கு வயது முதிர்ச்சி காரணமாகவும் பார்வை குறைபாடு காரணமாகவும் பூங்காவில் வைத்து பராமரிக்க முடியாததால், திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு அனுப்ப மாவட்ட வனத்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை யானையின் உடல் நலம் குறித்து பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். எனவே மருத்துவ பரிசோதனை செய்வதற்காக வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில் மருத்துவர்கள் நேற்று மாலை யானைக்கு பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது முதலில் யானை மருத்துவரை தாக்கியுள்ளது.