மதுரை:சிபிஎஸ்இ தலைவர் மனோஜ் அகுஜாவுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன் எழுதியுள்ள கடித விவரம் வருமாறு:
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வின் கேள்வித்தாளில் 'வாசிப்பு உரைநடை பகுதி' (Comprehension) இடம்பெற்றுள்ளது. அது குடும்ப அமைப்பு பற்றி மிகவும் பிற்போக்கான கருத்துகளைக் கொண்டதாக உள்ளது.
இதோ அதன் பகுதிகள் சில...
'பெண் விடுதலை என்பது குழந்தைகள் மீதான பெற்றோர் அதிகாரத்தைச் சிதைத்திருக்கிறது என்பதை மக்கள் தாமதமாகவே உணர்கிறார்கள்', 'கணவனின் செல்வாக்கிற்கு கீழ்ப்படிதலை மனைவி ஏற்பதன் வாயிலாகவே அவள் தன் குழந்தைகளிடமிருந்து கீழ்ப்படிதலைப் பெற முடிகிறது'.
இந்தக் கருத்துகள் அதிர்ச்சி அளிக்கின்றன. சமூக வரலாற்றின் பரிணாமத்தையும், பாலின நிகர்நிலை குறித்த நவீன சிந்தனைகளையும் மறுதலிப்பதாக உள்ளது. சமூக சீர்திருத்த இயக்கங்கள் இருந்திருக்காவிட்டால் இன்னும் சதி, குழந்தைத் திருமணம், தேவதாசி முறை போன்ற கொடூரங்கள் நீடித்திருக்கும் என்பதை நாம் எல்லாரும் அறிவோம்.
1987 வரையிலும்கூட 'சதி' அரங்கேறிக்கொண்டு இருந்தது. ரூப் கன்வார் என்கிற 18 வயது பெண் திருமணமாகி எட்டு மாதங்களில் கணவனை இழந்து அவனோடு சிதையில் ஏற்றப்பட்டு உயிர் பறிக்கப்பட்டாள்.
1930களில் இந்தியாவில் மூன்று கோடி குழந்தை கைம்பெண்கள் இருந்தனர். நாம் நமது குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தர வேண்டும்? பெண்ணுரிமைக்கான பெருமைமிக்க போராட்டங்கள் இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் எப்படி முற்றுப்புள்ளி வைத்தது என்பதையல்லவா?
ஆனால் கேள்வித்தாளை உருவாக்கியவர்கள் மாணவர்கள் மத்தியில் பிற்போக்கான கருத்துகளைத் தூவி இருக்கிறார்கள். இது அவர்களின் மனதைப் பாழ்படுத்தும் என்பதோடு தவறான பார்வைகளையும் பதிய செய்யும்.
சு வெங்கடேசன் எம்பி சிபிஎஸ்இ தலைவருக்கு கடிதம் அரசியல் சாசனம் வலியுறுத்தும் பாலின சமத்துவத்துக்கு எதிரான கருத்துகள் இடம்பெற காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு உங்கள் நிறுவனத்தின்கீழ் வரும் பள்ளிகள் பிற்போக்கான கருத்துகளைப் பரப்பக் கூடாது என்று அறிவுறுத்துமாறும் வேண்டுகிறேன்" என வலியுறுத்தியுள்ளார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கேள்வித் தாளில் சர்ச்சைக்குரிய வினாவை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து, 10ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுகிறது எனவும், அக்கேள்விக்குப் பதிலளித்த அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.