தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 6, 2021, 11:10 PM IST

Updated : Oct 7, 2021, 7:11 AM IST

ETV Bharat / city

அஞ்சலகப் படிவங்களில் மீண்டும் தமிழ் - அன்னைத் தமிழுக்கு கிடைத்த வெற்றி

அஞ்சலகங்களிலும் அடுத்த இரு வாரங்களுக்குள் பணவிடை, சேமிப்புக் கணக்கு சார்ந்த படிவங்களில் தமிழ் எழுத்துகள் இருக்கும் என அஞ்சல் துறை உறுதிபடுத்தியுள்ள நிலையில், இது அன்னைத் தமிழுக்கு கிடைத்த வெற்றி என சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சு. வெங்கடேசன்
சு. வெங்கடேசன்

மதுரை: அஞ்சல் துறைப் படிவங்களில் தமிழ்மொழி அகற்றப்பட்டது கண்டனத்துக்குரியது. உடனடியாக உரிய மாற்றங்களைச் செய்ய வலியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அஞ்சல் பொது மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இயங்கி வரும் 14 ஆயிரம் அஞ்சலகங்களிலும் அடுத்த இரு வாரங்களுக்குள் பணவிடை, சேமிப்புக் கணக்கு சார்ந்த படிவங்களில் தமிழ் எழுத்துக்கள் இருக்கும் எனவும்; பிற 40 வகையான படிவங்களும் அச்சடிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் அஞ்சலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அஞ்சல் துறை உறுதிபடுத்தியுள்ளது.

அந்நிய மொழிகளை திணிப்பது நியாயமா?

இது குறித்து சு. வெங்கடேசன் கூறியதாவது, “அஞ்சல் அலுவலக பண விடைகள் (Money order) சிறு சேமிப்பு படிவங்கள் (Small savings forms) இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இணைய வழியில் கிடைக்கின்றன; அலைபேசிகளில் கூட சாதாரண மக்கள் தமிழ் எழுத்துக்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிற காலத்தில் அஞ்சல்துறை மக்களுக்கு அந்நியமான மொழிகளை திணிப்பது நியாயமா? என்று ஒன்றிய அமைச்சருக்கும், தலைமை அஞ்சல் பொது மேலாளருக்கும் செப்.22ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தேன்.

இந்திய ஆட்சிமொழிச் சட்டங்களின்படி மாநில மொழிக்கான உரிமைகளை பறிப்பதை அனுமதிக்க முடியாது, சட்டத்தை மீறி இந்தி திணிக்கப்படுவதை ஏற்கமாட்டோம் என்பதை அமைச்சகத்துக்கு உறுதிபட தெரிவித்தோம். இந்தப் பின்னணியில் இன்று சென்னையில் தலைமை அஞ்சல் பொது மேலாளரை சந்தித்தேன். அப்போது அவர் அஞ்சல் துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து படிவங்களிலும் தமிழ் இருப்பதை எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளார்.

அன்னைத் தமிழுக்குக் கிடைத்த வெற்றி

அதனடிப்படையில் தமிழ்நாட்டில் இயங்கும் 14 ஆயிரம் அஞ்சலகங்களிலும் அடுத்த இரு வார காலத்துக்குள் பணவிடை, சேமிப்புக் கணக்கு சார்ந்த படிவங்களில் தமிழ் இருக்கும். பிற 40 வகையான படிவங்களும் அச்சடிக்கப்பட்டு அடுத்த ஒரு மாத காலத்துக்குள் அஞ்சலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.

அஞ்சல் துறையில் தமிழ் மொழி இடம்பெறாத படிவமே இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். அன்னைத் தமிழுக்குக் கிடைத்த மற்றொரு வெற்றி. இப்பிரச்னையில் தலையீடு செய்த ஒன்றிய அமைச்சருக்கும், தலைமை அஞ்சல் அலுவலர்களுக்கும் எனது நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிப்பா? - சு. வெங்கடேசன் கண்டனம்

Last Updated : Oct 7, 2021, 7:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details