மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலுள்ள வாக்குச்சாவடி மையத்தில் திமுகவைச் சேர்ந்த சில வேட்பாளர்கள் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தனர். இந்நிலையில், மதுரை ஒத்தக்கடை ஊராட்சியைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன், திடீரென வாக்குமையத்தைப் பூட்டினார். இதனையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிறகு செய்தியாளரிடம் பேசிய கிருஷ்ணன், "திமுகவைச் சேர்ந்த சிலர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களிடம் அத்துமீறி பரப்பரை செய்துவருகின்றனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது. காவல் துறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகையால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வாக்கு மையத்தை பூட்டுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை" என்றார்.