மதுரை : கிராமப்புறத்தில் வாய்ப்பின்றி வாழ்ந்து வரும் இளந்தலைமுறை ஆண்கள், பெண்களை தொழில் முனைவோராக உயர்த்துவதில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முனைப்புடன் இயங்கி வருகிறது ருட்செட் (Rural Development and Self Employment Training Institute) நிறுவனம். அதுகுறித்த ஒரு சிறப்புத் தொகுப்பை காணலாம்.
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் உள்ளது என்கிறார் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள். அதன் பொருட்டு கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டு இந்தியாவின் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்பதில் அசைக்க முடியாத உறுதியைக் கொண்டிருந்தார். கிராமங்கள் வளர்ந்தால் இந்தியாவின் வளர்ச்சியும் சாத்தியம் எனவும் நம்பினார். அதன் அடிப்படையிலேயே முதல் ஐந்தாண்டுத் திட்டங்கள் அனைத்தையும் கிராமப்புற மேம்பாட்டை மையமாகக் கொண்டே முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு உருவாக்கியிருந்தார்.
ருட்செட்
அந்தக் கனவை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக ருட்செட் எனும் நிறுவனம் நாடு முழுவதும் கடந்த 1982-ஆம் ஆண்டு, கர்நாடக மாநிலத்திலுள்ள தர்மஸ்தலாவின் தர்மாதிகாரி டாக்டர் டி.வீரேந்திர ஹெக்டேவை தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓரமைப்புதான் ருட்செட். முழுவதும் கிராமப்புற மேம்பாட்டை முதன்மை நோக்கமாகக் கொண்ட நிறுவனமாகும்.
இது குறித்து மதுரை பெருங்குடி விமானநிலைய சாலையில் அமைந்துள்ள ருட்செட் நிறுவனத்தின் இயக்குநர் ரவிக்குமார் கூறுகையில், கடந்த 1986-ஆம் ஆண்டு மதுரையில் ருட்செட் தொடங்கப்பட்டது. கர்நாடகாவிலுள்ள ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரர் கல்வி அறக்கட்டளையும், கனரா வங்கியும் இணைந்து உருவாக்கிய நிறுவனமாகும். 18 வயதிலிருந்து 45 வயதுக்கு உட்பட்ட கிராமப்புற ஆண்களும், பெண்களும் விண்ணப்பித்து இங்கு பயிற்சியில் சேரலாம். ருட்செட் நிறுவனம் வெறும் பயிற்சி மையம் கிடையாது. ஒவ்வொரு இளைஞரும் தொழில் முனைவோராக மாறுவதற்கான அனைத்துவிதமான வழிகாட்டல்களையும் வழங்கக்கூடிய வழிகாட்டு மையமாகவும் திகழ்கிறது' என்கிறார்.
62 வகையான தொழில்கள்
ருட்செட் நிறுவனத்தில் 62 விதமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பால்பண்ணை அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல், செல்பேசி பழுது, ஒப்பனைக்கலை, கைவினைப் பொருள்கள் தயாரித்தல், தையல், எம்பிராய்டரி, இலகுரக வாகன ஓட்டுதல் பயிற்சி, காளான் பண்ணை அமைத்தல், சணல் பொருள்கள், இருசக்கர வாகன பழுது பார்த்தல், ஃபோட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி, அப்பளம், ஊறுகாய் மற்றும் மசாலா பொருள்கள் தயாரித்தல், மெழுகுவர்த்தி தயாரித்தல் உள்ளிட்ட தொழில்கள் இங்கே கற்றுத் தரப்படுகின்றன.
45 நாள்கள் பயிற்சி
உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசம். இப்பயிற்சிகள் அனைத்தும் 6 நாள்களிலிருந்து 45 நாள்கள் வரை கால அளவு கொண்டவையாகும். ருட்செட் நிறுவனத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் வீரராகவன் கூறுகையில், 'பயிற்சிக்கு முன்பு, பயிற்சியின் போது, பயிற்சிக்குப் பின்பு என மூன்று விதமாக பயிற்சியாளர்களை கண்காணிப்புச் செய்கிறோம்.
பயிற்சியில் ஒருவர் இணைவதற்கு முன்பாக விழிப்புணர்வு முகாம் நடைபெறும். அதில் ஆர்வமுள்ள நபர்கள் கண்டறியப்பட்டு பயிற்சிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். விண்ணப்பித்த இளைஞர்கள் பெண்கள் செய்ய விரும்புகின்ற தொழில் குறித்த போதுமான ஆர்வமும், அறிவும் இருப்பதை உறுதி செய்கிறோம். கற்றுக் கொள்கின்ற தொழில் பயிற்சியிலிருந்து அவர்களது தனிப்பட்ட நடத்தை முறைகள் வரை இங்கே கற்றுத் தரப்படுகின்றன' என்கிறார்.
தொடர் ஆலோசனைகள்
இங்கு பயிற்சிக்கு வருகின்ற ஒவ்வொருவருக்கும் ஆளுமைத் திறன் மற்றும் மேம்பாடு சார்ந்த பயிற்சிகளும் அளிக்கப்படுவது ருட்செட்டின் தனிச் சிறப்பு. பயிற்சி நிறைவடையும் தருணத்தில் வெளிநபர்களைக் கொண்டு மதிப்பீடு செய்வதுடன், வங்கிக் கடன்களைப் பெறுவதற்கும் தொடர்ச்சியான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.