தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா பீதியிலிருந்து மீள வித்தியாசமான கேம் விளையாடும் நடைபாதை வாசிகள்! - Walking dwellers playing a different game from Corona Panic

கரோனா தொற்று காரணமாக நடைபாதைகளில் வசித்து வந்தோருக்கும், தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாதோருக்கும் மன அழுத்தம் குறைய தானே கண்டுபிடித்த சமூக சிந்தனையைத் தோற்றுவிக்கும் வித்தியாசமான விளையாட்டுப் பயிற்சியை அளித்து ஊக்குவிக்கிறார் மதுரையைச் சேர்ந்த இளைஞர் அப்துல்ரகுமான். இது குறித்த சிறப்பு தொகுப்பு.

இது வித்தியாசமான விளையாட்டு பயிற்சி
இது வித்தியாசமான விளையாட்டு பயிற்சி

By

Published : Apr 3, 2020, 1:59 PM IST

கரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையோர வாசிகளும் ஆதரவற்றோர்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் மதுரையில், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து நடைபாதைகளில் வசித்து வந்தவர்களை மாநகராட்சிக்குச் சொந்தமான மண்டபங்களில் தங்கவைத்து அவர்களுக்குப் போதுமான வசதிகளை செய்து வருகின்றனர். அதன்படி, பழங்காநத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு, சமூக இடைவெளி, மாஸ்க், கிருமி நாசினி என அரசு சொன்ன அனைத்தையும் பின்பற்றினாலும் கரோனா பற்றிய பயம் அத்துமீறத்தான் செய்கிறது. இதைத் தடுக்கும் பொருட்டும் இப்படி தங்கியிருப்பவர்களுக்குப் புத்துணர்ச்சி தரும் பொருட்டும் தன்னார்வலர்கள் கூடி ஓர் முடிவு செய்தனர்.

தன்னார்வலர்கள் குழு

அது தான் கேமில் ஈடுபடுத்துதல். அதுவும் அப்துல் ரகுமான் கண்டறிந்த வாழ்க்கையின் பல படி நிலைகளை கற்றுத் தரும் ப்ரைன் கேமில் ஈடுபடுத்துதல். இது குறித்து தன்னார்வலர் குளோரி கூறுகையில், "மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த ஆதரவற்றோர் 89 பேரை மீட்டு இந்த மண்டபத்தில் தங்க வைத்துள்ளோம்.

இது வித்தியாசமான விளையாட்டு பயிற்சி

அவர்களுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிட வசதி செய்து கொடுத்தாலும் அவர்களின் மன அழுத்தத்தை போக்க நூல்கள், கலை நிகழ்ச்சி என நடத்தினாலும் அப்துல் ரகுமான் உருவாக்கியுள்ள விளையாட்டின் மூலம் அவர்கள் மிகவும் புத்துணர்ச்சி பெறுகிறார்கள் என்பது எங்களுக்கு வியப்பாக உள்ளது" என்றார்.

விளையாட்டை கண்டறிந்த அப்துல் ரகுமான்

செஸ், கேரம் போன்ற வடிவத்தில் இருந்தாலும் அந்த விளையாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக, இந்த விளையாட்டு உள்ளது. வெறுமனே விளையாட்டு என்று இல்லாமல் வாழ்க்கை திறனை, சிந்திக்கும் ஆற்றலை, இயற்கையின் மீதான நேசத்தை மேம்படுத்துவதாக இது அமைந்துள்ளது.

30 முதல் 100 நபர்கள் வரை, ஒரே நேரத்தில் அமர்ந்து இதை விளையாட முடியும். இது குறித்து அப்துல் ரகுமான் கூறுகையில், "வீட்டுக்குள் முடங்கி இருக்கும் அனைவருக்கும் இந்த விளையாட்டு அருமருந்தாகும். தன்னார்வலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இப்படி ஒரு பேரிடர் காலங்களில் அனைவருக்கும் உறுதுணையாக இருந்து செயல்படுகிறார்கள்.

அதனை மனதில் கொண்டு என்னால் என்ன செய்ய முடியும் என்று எண்ணிய போதுதான் நான் கண்டுபிடித்த விளையாட்டை ஆதரவற்றவர்களுக்குக் கற்றுத் தருவதன் மூலம் அவர்களது மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஒரு காரணியாக இருக்கலாம் என்றெண்ணி இவர்கள் அனைவருக்கும் இவ்விளையாட்டை கற்றுத் தந்துள்ளேன்.

இதனை மிகப் பெருமையாக கருதுகிறேன்." என்று பெருமிதம் கொண்டார்.

முடங்கி கிடங்கும் வேளையில் மூளைக்கு வேலை தரும் 'BRAIN GAME' - சிறப்பு தொகுப்பு

அப்துல் ரகுமானின் இந்த விளையாட்டு தற்போது இவர்களுக்குத் தக்க பொழுதுபோக்காய் வாய்த்தது. இங்கிருக்கும் பலர் மற்ற கேரம், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளைவிட இந்த விளையாட்டை விளையாடுவதில் மிக ஆர்வமாய் உள்ளனர்.

இதுகுறித்து டேவிட் என்பவர் கூறுகையில், "வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ள கூடிய பல்வேறு சவால்களை எவ்வாறு திறம்பட எதிர்கொள்வது என்பதை இந்த விளையாட்டின் மூலமே நாம் கற்றுக்கொள்ளலாம். மிக உற்சாகமான மனநிலையை இந்த விளையாட்டு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது." என்று கூறினார்.

ஊரடங்கின் காரணமாக முடங்கியுள்ள இவர்களுக்கு இந்த விளையாட்டு உணர்வுப்பூர்வமானதாக மாறியுள்ளது. மன நிம்மதியை இழந்து தவித்தப் பலருக்கு இந்த விளையாட்டு மனநிலையை ஒருமுகப்படுத்தி சமூகச் சிந்தனையை உருவாக்கியுள்ளது. இந்த வாய்ப்பை இவர்களுக்கு உருவாக்கி கொடுத்த தன்னார்வலர்களுக்கும் அப்துல் ரகுமானுக்கும் பாராட்டுகள்!

இதையும் படிங்க: 'ஓவியங்களால் சரணாலயமாய் மாறிய சாலையோர சுவர்கள்'

ABOUT THE AUTHOR

...view details