மதுரை:கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு (எம்பிசி) மொத்தமாக 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வரும் சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியது. இதற்கு தமிழ்நாடு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தில் (எம்பிசி) மொத்தமாக உள்ள 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
68 சமூகத்தைக் கொண்ட சீர்மரபினர்களுக்கு 7 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு 2.5 விழுக்காடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால், 40 சமூகத்தைச் சேர்ந்த மக்களின் கல்வி, வேலை அனைத்தும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.