மதுரை: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம். பனை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பலவற்றுக்குப் பயன்படுவதோடு அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாகவும் உள்ளன. பனங்கூழ், பனம்பழம், பனை வெல்லம், அதிலிருந்து தயாரிக்கப்படும் பனை கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றில் மருத்துவ குணம் நிறைந்துள்ளன.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பனை சார்ந்த தொழில்கள் அதிக அளவில் உள்ளன. உடன்குடி, வேம்பார் பகுதி பனை வெல்லமும், பனங்கற்கண்டும் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆனால் பலர் இதனை தவறாக பயன்படுத்தி சர்க்கரை பாகு, சர்க்கரை ஆகியவற்றோடு சில ரசாயனங்களைச் சேர்த்து பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்ற தோற்றத்தையும் வாசனையையும் ஏற்படுத்தி விற்பனை செய்கின்றனர்.
உடன்குடி பகுதியில் சுமார் 50 ஆயிரம் பேர் வசிக்கும் நிலையில் மாதம் 120 டன் சர்க்கரை அப்பகுதியில் விற்பனையாகிறது. இதன் மூலம் சர்க்கரை வீட்டு உபயோகத்திற்கு மட்டுமல்லாமல், இது போன்ற உணவு கலப்படத்திற்கும் பயன்படுத்தப்படுவது உறுதியாகிறது. ஆகவே தூத்துக்குடி மாவட்டத்தில் சர்க்கரை, சர்க்கரை பாகு ஆகியவற்றை கலப்படம் செய்து பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிக்கவும், அதற்கு அனுமதி வழங்கவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்.