மதுரை:முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (ஆக.6) முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொளியில் ,'முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.50 அடியாக அதிகரித்து வரும் வேளையில், கடந்த 5ஆம் தேதி இடுக்கி அணைக்கு செல்லும் விதமாக, வினாடிக்கு 534 கன அடி நீரை தமிழக அதிகாரிகள் திறந்தனர். இதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர், ரூல் கர்வ் மூலம் திறந்து விட வேண்டும் என்று கேரள முதலமைச்சர், தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் 534 கன அடி நீரை தமிழக அதிகாரிகள் 3 மதகுகள் மூலம் திறந்துள்ளார்கள். இதன் மூலம் 5 மாவட்ட விவசாயிகள் வயிற்றில் அடித்து கொடுமையான சம்பவத்தை திமுக அரசு நிகழ்த்தியுள்ளது.
நம்பிக்கையை சீர்க்குலைக்கும் திமுக அரசு:விவசாயிகளின் 2 ஆண்டு கால நம்பிக்கையை திமுக அரசு சீர்குலைத்துள்ளது. இதனால், குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்படும். தமிழக அரசின் சார்பில் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர்.
ஏற்கனவே, 2021ஆம் ஆண்டு அக்.28ஆம் தேதி, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு கேரளா அரசின் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதை கேரளா அமைச்சர் ரோசி அகஸ்டின், அணைக்குச் செல்லாமல் வல்லக்கடவு பகுதியில் தண்ணீர் திறப்பை பார்வையிட்டார்.