மதுரை: மதுரை மடீசியா ஹாலில் மதுரை எக்கனாமிக் சேம்பர் நடத்தும் இரண்டாம் நாள் வர்த்தக கண்காட்சியினை ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் இணைந்து தொடங்கிவைத்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் கனி கூறுகையில், "ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பே மக்களவையில் அதுகுறித்து பேசி இருக்கிறோம். தற்போது, கைதுசெய்யப்பட்ட உடன் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கேட்டோம். கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து, அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளோம்.
நிரந்தர தீர்வு வேண்டும்
ஒன்றிய மீன்வளத் துறை அமைச்சரை சந்தித்து பாதுகாப்பு குறித்து வலியுறுத்தியுள்ளேன். தற்போது மீனவர்கள் கைது செய்யப்படுவது புதிதல்ல, பலமுறை கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு, காரணம் ஒன்றிய அரசு இலங்கை அரசிடம் மென்மையான போக்கை கையாள்வதுதான். கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
மேலும், மீனவ சங்க பிரதிநிதிகளுடன் டெல்லியில் உள்ள ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். ஒன்றிய அரசு இலங்கை அரசுக்கு கண்டனங்களை தெரிவித்தால் மீனவர்கள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒன்றிய அரசின் மென்மையான போக்கினால்தான் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள்.
படகுகளை விடுவிக்க வேண்டும்
ஒன்றிய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடக்காமல் தமிழ்நாடு மீனவர்களை அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு ஒன்றிய அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். 14 நாட்டிக்கல் மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவில் மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும்.
மீனவர்களை விடுவித்தால் மட்டும் போதாது மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும். ஏனெனில், படகுகள் இல்லையெனில் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினோம்.
அதேபோல, முதலமைச்சர் கொடுத்த கடிதமும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன், தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சரை மீனவ பிரதிநிதிகள் சேர்ந்து சந்தித்து இதுகுறித்து தெரிவித்துள்ளோம்.