மதுரை: அரும்பனூர் கிராமத்தில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார். பின்னர், விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய பொருள்களை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மூர்த்தி, “கிராமப்புறங்களில் அந்தந்த பகுதியில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் நெல், அந்தந்த பகுதியிலேயே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நெல் கொள்முதல் அந்தந்தப் பகுதி விவசாயிகள் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும், வேறு பகுதியில் இருந்து கொள்முதல் செய்யக்கூடாது என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் குறித்த விவரங்கள்
இதில் தவறு ஏற்படும் பட்சத்தில் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடமும், துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கலாம், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல்லுக்கு உரிய விலை அரசு மூலம் வழங்கப்படுகிறது.
கடந்த ஆட்சியாளர்கள் போல் ஒரே இடத்தில் நெல் கொள்முதல் செய்யவில்லை. எங்கெங்கு நெல் அறுவடை செய்யப்படுகிறதோ, அங்கெல்லாம் சென்று கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் பெறப்படுகிறது. இதில், விவசாயிகள் வழங்கும் நெல் தவிர வியாபாரிகளின் நெல் ஒரு விழுக்காடுகூட வழங்கப்படமாட்டாது.