மதுரை:உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
ஆன்மிகம், வரலாறு, கலை, பண்பாட்டு அடையாளங்களுடன் மீனாட்சி கோவில் இன்றளவும் திகழ்கிறது. கடந்த 2009ஆம் ஆண்டு மீனாட்சி கோவில் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடைபெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு மீனாட்சி கோவிலின் கிழக்கு கோபுரம் அருகே அமைந்துள்ள வீர வசந்தராயர் மண்டபம் தீ விபத்துக்கு ஆளானது.
இவ்விபத்தில் அக்குறிப்பிட்ட வசந்தராயர் மண்டபம் முழுவதும் தீக்கிரையாகி, கலைநயமிக்க கல்தூண்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. அதனைப் புனரமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், திருக்கோயில் குடமுழுக்கு திருப்பணிக்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு, மாநில அளவிலான வல்லுநர் குழு இந்து சமய அறநிலையத்துறையால் அமைக்கப்பட்டது.