தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 23, 2020, 10:19 PM IST

Updated : Aug 23, 2020, 10:31 PM IST

ETV Bharat / city

பறவைகளின் எச்சங்கள் விழுவதை தடுக்க ஏற்பாடு - திருமலை நாயக்கர் மகாலில் வலை அமைக்கும் பணி தீவிரம்!

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் புறாக்கள், வவ்வால்கள் நுழைவதை தடுக்கும் விதமாக அரண்மனையில் திறந்த முற்றம் மற்றும் சாலைகளில் வலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்காமல் அரண்மனையின் அழகை கண்டுகளிக்க 49 ஆண்டுகளுக்கு பிறகு தீர்வு காணப்பட்டுள்ளது.

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை

மதுரையின் வரலாற்று சிறப்புமிக்க அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் திருமலை நாயக்கர் அரண்மனை, மன்னர் திருமலை நாயக்கரால் 1636ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். மொத்த அரண்மனையில் நான்கில் ஒரு பாகம் மட்டுமே தற்போது எஞ்சி நிற்கிறது. இந்தோ சாரசானிக் கட்டடக்கலையின் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த அரண்மனையில் மன்னரால் ராஜ பரிபாலனம் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.

ஆனால் தற்போது புறாக்களும், வவ்வால்களின் எச்சமும் இந்த அரண்மனையின் அனைத்துப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்து கிடக்கிறது. இதற்காக தமிழ்நாடு தொல்லியல் துறையும், சுற்றுலாத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் கூட அதற்கு நிரந்தர தீர்வு காண முடியாத நிலை இருந்து வந்தது.

இவ்வேளையில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியோடு மூன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது அரண்மனையின் உள்ளேயும், வெளியேயும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்றுதான் புறாக்கள், வவ்வால்களின் வருகையை தடுக்க மிக பிரம்மாண்டமான முறையில் வலை அமைக்கப்பட்டிருப்பது.

வரலாற்றுச் சிறப்புமிக்க திருமலை நாயக்கர் அரண்மனை

இதுகுறித்து இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பு பொறியாளரும் தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறையில் ஆலோசகராகவும் பணியாற்றுகின்ற வாசுதேவன் கூறுகையில், ”திருமலை மன்னர் அரண்மனையில் சிதிலமடைந்த பகுதிகள், கலசங்களை சீரமைத்தல், தளம் அமைத்தல், வெள்ளையடித்தல், பாரம்பரிய பூச்சு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, அரண்மனையின் திறந்தவெளி முற்றத்திலும், சாளரங்கள், கதவுகளில் வலைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

புறாக்கள், வவ்வால்களால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்ப்பதற்காக நைலான் இழைகள் மூலமாக வலையமைக்கும் பணியும் நடைபெறுகிறது. அரண்மனையின் நடுமுற்றத்தில் மிகப்பிரமாண்டமாக இந்த வலை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் எவ்வித இடையூறுமின்றி புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வகையில், வலை இருப்பது போன்றே தெரியாத வகையில் மிக நேர்த்தியாக இந்த வலை அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே வலையமைத்து தொல்லியல் சின்னம் பராமரிக்கப்படுவது இது முதல் முறையாகும். இந்த வலை சுமார் பத்தாண்டு காலம் உழைக்கக் கூடியதாகும்” என்கிறார்.

இந்த அரண்மனையின் உயரம் 58 அடி ஆகும். மொத்தம் 248 தூண்கள் கொண்ட இந்த அரண்மனை 1971ஆம் ஆண்டு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு, அப்போதிருந்து தமிழ்நாடு தொல்லியல் துறையால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மாநில சுற்றுலா துறையின் சார்பாக ஒவ்வொரு நாளும் ஒலி, ஒளி காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சுற்றுலா வழிகாட்டி ராஜா கூறுகையில்:

திருமலை நாயக்கர் அரண்மனை நீண்ட நெடுங்காலத்திற்கு பிறகு தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் பறவைகள் உள்ளே வராதவாறு வலை அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 2000 பேர் இந்த அரண்மனையை பார்வையிடுகின்றனர். அவர்கள் அனைவருமே புறா, வவ்வால்களின் எச்சங்களால் முகம் சுளிக்கும் நிலை இருந்துவந்தது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருப்பது போன்றே இங்கும் வலை அமைத்து அரண்மனையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும்.

உள்நாடு வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திருமலை நாயக்கர் அரண்மனை இன்றளவும் திகழ்கிறது இந்த அரண்மனையின் பிரம்மாண்டம் சுற்றுலா பயணிகளை சொக்க வைக்கும் ஆற்றல் கொண்டதாகும் என்றார்.

மற்றொரு சுற்றுலா வழிகாட்டி ரத்தினம் கூறுகையில்:

எங்களது சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்தின் சார்பாக மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை தமிழ்நாடு அரசுக்கும் சுற்றுலாத்துறையும் சமர்ப்பித்தோம். வரலாற்று சிறப்புமிக்க அரண்மனையில் புறாக்களின் எச்சம் காரணமாக பல்வேறு வெளிநாட்டு பயணிகள் எங்களிடம் பலமுறை குறை கூறியுள்ளனர். இதற்கான பராமரிப்பு செலவுகள் மிகவும் அதிகரிக்கும் என்றே எச்சரிக்கை செய்தனர். ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் அரண்மனையில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் எங்களுக்கு பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக தொல்லியல் துறைக்கும், சுற்றுலாத்துறைக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்

வரலாற்று பெருமைக்குரிய நாயக்க மன்னர்களின் அடையாளமாகத் திகழும் மன்னர் திருமலையின் அரண்மனை சீரமைக்கப்படுவதன் மூலம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும், அதன்மூலம் சுற்றுலாவின் மூலமாக உள்ளூர் பொருளாதாரம் மேம்படவும் அதிக வாய்ப்பு உண்டு. அழகிய வேலைப்பாடு மிக்க அரண்மனையை பராமரிக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

Last Updated : Aug 23, 2020, 10:31 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details