தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 25, 2021, 2:08 PM IST

ETV Bharat / city

மதுரை தெப்பக்குளம் ஆக்கிரமிப்பு: புகைப்படங்களைச் சமர்ப்பிக்க உத்தரவு

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தின் தற்போதைய புகைப்படங்களை இந்து சமய அறநிலையத் துறை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

v
v

மதுரை சின்ன அனுப்பானடியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.

அதில், "மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் டவுன்ஹால் சாலையில் உள்ளது. அதன் கலைத் தோற்றத்தை மறைக்கும் வகையில் நான்கு புறங்களிலும் வணிக நோக்கில் கட்டுமானங்கள் உள்ளன. இதனால் நீர் வழித்தடம் சேதமடைந்துள்ளது. தெப்பக்குளத்தில் குப்பை குவிக்கப்படுகிறது. கழிவுநீர் கலக்கிறது.

இவ்விவகாரத்தை உயர் நீதிமன்றம் 2011இல் தானாக முன்வந்து விசாரித்து உத்தரவிட்டதன்பேரில், தெப்பக்குளத்தைச் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின் எந்த நடவடிக்கையும் இல்லை.

தெப்பக்குளத்தின் ஒரு பகுதியில் 2019இல் சில கடைகள் அகற்றப்பட்டன. அதன்பின் ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை. அறநிலையத் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையருக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தின் கலைநயத்தை மறைக்கும் கட்டுமானங்களை அகற்றுவதை உறுதிசெய்ய வேண்டும். குப்பை குவிப்பது, கழிவுநீர் கலப்பதைத் தடுத்து தெப்பக்குளத்தை பழைய நிலைக்கு கொண்டுவந்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில், 195 கடைகளில் 99 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. கடைகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிராக சில கடைக்காரர்கள் அறநிலையத் துறையிடம் சீராய்வு மனு செய்துள்ளனர். அது நிலுவையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், தெப்பக்குளத்தைச் சரியாகப் பராமரிக்காத அலுவலரின் சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது எனக் கேள்வி எழுப்பியதோடு, சரியாக வேலை செய்யாத அலுவலரைப் பணியிட மாற்றம் செய்யலாம் என்றனர். நீதிமன்றங்களைக் குறைவாக மதிப்பிட வேண்டாம் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

மேலும், "மனுதாரர் தாக்கல்செய்த புகைப்படங்களைப் பார்க்கும்பொழுது தெப்பக்குளத்தை கோயில் நிர்வாகம் சரியாகப் பராமரிக்கவில்லை எனத் தெளிவாகிறது.

எனவே தெப்பக்குளத்தின் தற்போதைய புகைப்படங்களை இந்து சமய அறநிலையத் துறை, மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தெப்பக்குளத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும்" எனக் கூறி வழக்கு விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கூடலழகர் பெருமாள் கோயில் வழக்கு - நில வரித்துறை ஆணையர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details