மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”21 நாள்கள் தனித்திருப்பது பெரியவர்களாகிய நமக்கே பெரிய சவாலாக இருக்கும்போது நம் குழந்தைகள் எப்படித்தான் இந்த நாள்களைக் கடந்து வருவார்கள்? தெருவையும் மைதானத்தையும் நண்பர்களையும் பிரிந்து வாடிக்கொண்டிருக்கும் அவர்களின் சோகம் மிகப்பெரியது.
ஒவ்வொரு வீட்டிலும் நாள் முழுக்கக் குழந்தைகளைச் சோர்வடைந்துவிடாமல் உற்சாகமாக வைத்திருக்கப் பெற்றோர்கள் படும்பாடு, அதனால் அவர்கள் அடையும் மனஉளைச்சல் இன்று முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக முன்னுக்கு வந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் இதற்குச் சிறு அளவிலேனும் நம்மால் ஏதேனும் உதவ முடியுமா எனக் கடந்த சில நாள்களாக ஆலோசித்ததன் விளைவாக குழந்தைகளுக்கான கீழ்க்கண்ட கலை இலக்கியப் போட்டிகளை அறிவிக்கிறோம். வீட்டிலிருந்தபடியே குழந்தைகள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.
இப்போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் ஓய்வுநேரத்தைக் குழந்தைகள் தங்களது படைப்பாற்றலை வளர்க்கப் பயன்படுத்திக்கொள்வார்கள். படைப்பாற்றலைச் சிறப்பாக வெளிப்படுத்தும் குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
போட்டிகள்:
1.நாள்தோறும் ஒரு கதை;
நாள்தோறும் ஒரு கதையை தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் எழுத வேண்டும் (ஒவ்வொரு மொழிப்படைப்புக்கும் தனித்தனியே பரிசுகள் உண்டு).ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் எழுதும் கதை 100 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் எழுதும் கதை 100 வார்த்தைகளுக்குக் குறையாமலும், 300 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 10,11,12 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் எழுதும் கதை 500 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
2. நாள்தோறும் ஒரு கவிதை
நாள்தோறும் ஒரு கவிதையை மரபுக்கவிதை, புதுக்கவிதை, இசைப்பாடல் என எந்த வடிவத்திலும் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் எழுத வேண்டும். கவிதை ஒரு பக்கத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்போட்டியில் 6ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் பங்கேற்கலாம்.
3. நாள்தோறும் ஓர் ஓவியம்
பென்சில், பேனா, க்ரெயான், வாட்டர் கலர், பெயின்ட் ஆகிய எந்த வரைபொருளைக் கொண்டும் தாளில் கோட்டோவியம், வண்ண ஓவியம், தத்ரூப ஓவியம், கார்ட்டூன் ஆகிய எந்த வடிவத்திலும் படம் வரைந்து, அதனைப் படமெடுத்து அனுப்பலாம். கணினி, செல்போன் மூலம் வரையப்படும் ஓவியங்களையும் அனுப்பலாம். ஒன்றாம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஒரு பிரிவாகவும் 7ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுவர்களுக்கு ஒரு பிரிவாகவும் பரிசுகள் வழங்கப்படும்.
4. நாள்தோறும் ஒரு குறும்படம்
ஒரு நிமிடம் ஓடக்கூடிய குறும்படத்தை செல்போன் உதவியுடன் எடுத்து, கீழே தரப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண்ணுக்கு உங்களது வீட்டின் முழு முகவரியுடன் அனுப்ப வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை படிக்கும் அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
5. நாள்தோறும் ஒரு நகைச்சுவை
ஒரு நிமிடம் ஓடக்கூடிய Standup comedyயை செல்போனில் படமெடுத்து கீழே தரப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை படிக்கும் அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
விதிகள்:
1. மேற்குறிப்பிட்ட போட்டிகளில் பெற்றோர்கள் தாங்கள் படைப்பினை உருவாக்கி குழந்தைகள் பெயரில் அனுப்ப வேண்டாம். குழந்தைகளின் படைப்புத்திறன் வளர்ச்சிக்கு அது உதவாது. குழந்தைகளும் உங்களிடமிருந்து தவறான முன்னுதாரணத்தையே கற்றுக்கொள்வார்கள். இப்போட்டிகளில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும்.
2. படைப்புகள் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.