தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 23, 2020, 6:32 PM IST

ETV Bharat / city

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க ஏன் மறுக்கிறீர்கள்?

மதுரை: தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதில் ஏன் இந்த முரண்பாடு? என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

high court
high court

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ” மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நான், தமிழ் வழியில் படித்தவன். தமிழக காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணிக்காக கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வானது எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு என்று 3 கட்டங்களாக நடைபெறும்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி நடந்த எழுத்துத் தேர்வில் பங்கேற்று, 70 க்கு 51 மதிப்பெண்கள் பெற்றேன். அதைத்தொடர்ந்து உடல் திறன் தேர்வில் 15க்கு 12 மதிப்பெண்கள் பெற்றேன். இந்நிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கான 64 கட் ஆஃப்பில், நான் 63 மதிப்பெண் பெற்ற நிலையில், நேர்முகத்தேர்வுக்கு என்னை அழைக்கவில்லை. தமிழ் வழி படித்தோருக்கான ஒதுக்கீட்டின் படி அழைத்திருந்தால் நானும் நேர்முகத்தேர்வுக்கு சென்றிருப்பேன். ஆனால், அங்கு ஒதுக்கீடு முறை முறைப்படி செயல்படுத்தப்படவில்லை.

எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போன்று, சார்பு ஆய்வாளர் தேர்விலும் தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டிற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதுவரை கடந்த 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தேச தேர்வு பட்டியலுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் ” என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, ” தமிழ்வழி படித்தோருக்கான இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதில் ஏன் இந்த முரண்பாடு? தமிழ் வழியில் படித்தவர்கள் தமிழகத்தில்தான் வேலைக்கு செல்ல முடியும். ஏன் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க மறுக்கிறீர்கள்? சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான உத்தேசப் பட்டியலுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவது தொடர்பாக, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் “ என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: 'திமுக வாழ்க்கையே பினாமி வாழ்க்கைதான்' - அமைச்சர் சி.வி. சண்முகம்

ABOUT THE AUTHOR

...view details