தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 11, 2020, 10:55 PM IST

ETV Bharat / city

5 ஆண்டுகளில் எத்தனை கல்வெட்டு ஆய்வுகள் நடந்துள்ளன- மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை கல்வெட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றி மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: தமிழ்நாட்டில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக் கோரி எழுத்தாளர் எஸ்.காமராஜ், மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் இன்று, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் ஏற்கனவே 50 நினைவு சின்னங்களுக்கு பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50 நினைவுச் சின்னங்களுக்கு பராமரிப்பாளர்கள் நியமனம் தொடர்பாக அரசுக்கு நவ.5- ல் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு டிச.,17ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தொல்லியல் நினைவுச் சின்னங்கள் குறித்து, அடுத்த விசாரணைக்குள், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பெயர் பலகைகள் அமைக்க வேண்டும்.

மதுரை யானைமலையில் ஜெயின் படுகைக்கு செல்லும் வழியில், சிமெண்ட்டினால் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பழங்கால நினைவுச் சின்னத்தின் அடையாளத்தை மாற்றும் வகையில் அங்கு எவ்வித மத அடையாளங்களையும் நிறுவக்கூடாது. இதனால் யானைமலையில் உள்ள சிமெண்ட் சிவலிங்கத்தை அகற்ற வேண்டும். தவறினால் மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் படிப்புகளை கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் உள்ளார்களா? ஆசிரியர்களின் காலிப்பணியிடம் தொடர்பாக இரு பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரரின் வழக்கறிஞர் ஆர். அழகுமணி, ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல், ஆலங்குளம், சிவகளை பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களின் மாதிரியைத் தாக்கல் செய்துள்ளார். அவைகளை அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வு மையத்துக்கு கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், மயிலாடும்பாறை, கொற்கை, கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வு நடத்த தமிழ்நாடு தொல்லியல்துறை அனுமதி கேட்டுள்ளது. இதன் மீதான முடிவை மத்திய தொல்லியல்துறை தெரிவிக்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை கல்வெட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது என்பதையும் மத்திய தொல்லியல்துறை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கு விசாரணையை டிச., 18ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: எரிவாயு குழாய் பதிப்பால் பாதிப்படைந்த விவசாயிகளை சந்தித்த சு.வெங்கடேசன் எம்பி

ABOUT THE AUTHOR

...view details