தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையின் அதிகாரத்திற்குட்பட்ட திருக்கோயில்களில் உள்ள சிலைகளைப் பாதுகாக்க போதிய பாதுகாவலர்கள் பணியமர்த்த கோரிக்கை விடுத்து திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோவில் சன்னதி தெருவைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், “இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டு தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 36 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் மொத்தம் 100 காவலர்களை பணியில் உள்ளனர் . மற்ற கோயில்களில் பாதுகாவலர்கள் நியமிக்கப்படவில்லை. அதேபோல, பெரும்பாலான திருக்கோயில்களுக்கு தேவையான பணியாளர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. பழமையான கோயில்களில், கோவில் நடைதிறப்பு, தூய்மை பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் அந்தந்த கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் தான் மேற்கொள்கின்றனர்.
அத்துடன், நிறைய கோயில்களில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால் பக்தர்களுக்கு அந்த கோயில்களுக்கு செல்வதற்கு கூட அச்சம் ஏற்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிலர் சிலை கடத்தலில் ஈடுபடுகின்றனர். அதே நேரத்தில், சமூக விரோதிகள் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. திருட்டை தடுக்க வேண்டும் என்பதற்காக தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை வேலைக்கு நியமிக்க வேண்டும்.
இந்த பணிகள் தான் பிரதானமான பணிகளாக உள்ளது. திருக்கோயில்களுக்கு தேவையான பாதுகாவலர்களை நியமனம் செய்வது, அவர்களது வாழ்வாதரத்திற்கான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளாமல் இந்துசமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு முன்னுரிமை அளிப்பது என்பது ஏற்புடையதல்ல.