தமிழ்நாடு

tamil nadu

கன்னியாகுமரி கடற்கரையில் கடைகள் கட்டுமானப் பணிகள் தொடரக்கூடாது: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!

By

Published : Mar 18, 2021, 12:33 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி திருவேணி சங்கம பகுதிகளில் கட்டப்பட்டுவரும், கடைகள் கட்டுமானப் பணிகளை தொடரக்கூடாது என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

கன்னியாகுமரி பலவேசமுத்து என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான இங்கு, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், வங்கக்கடல் ஆகிய மூன்று கடல்களும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடத்தை 'முக்கடல் சங்கமம்' என்று அழைக்கிறோம்.

கன்னியாகுமரி, திருவேணி சங்கமம்

இதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி, திருவேணி சங்கமத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வணிக நோக்கில் கடைகள் கட்டப்பட்டு வருகிறது. விதிமுறைப்படி திருவேணி சங்கமத்தில் கடைகள் கட்டக்கூடாது.

கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ளது. மேலும் நிரந்தர கடைகள் கட்டுமானம் நடைபெறுவதால், முக்கடல் சங்கமத்திலிருந்து காமகோடி பீடம், விவேகானந்தர் கோயில், சுனாமி நினைவிடம் உள்ளிட்ட தலங்களை பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க முடியாது.

இந்து சமய அறநிலையத்துறை

எனவே, கன்னியாகுமரி, திருவேணி சங்கமத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வணிக நோக்கில் கட்டப்பட்டுவரும் கடைகளை கட்டத் தடைவிதித்து, கட்டுமானங்களை அகற்ற வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கன்னியாகுமரி, திருவேணி சங்கமத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளைத் தொடரக்கூடாது” என உத்தரவிட்டனர்.

மேலும், மனுதாரரின் கோரிக்கை குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details