ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ராஜு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மாவட்ட, தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதர நிலையங்களில் சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியாக பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள். சிகிச்சை அளிக்கும் மருத்துவர் நோயாளியை பரிசோதித்த பின்னர் காலை, மதியம், இரவு மற்றும் உணவுக்கு முன், பின் உட்கொள்க என அறிவுறுத்தி மருந்துகளை வழங்குகின்றனர்.
ஆனால், மருந்தாளுனர்கள் அவை அனைத்தையும் உரிய குறிப்புகளின்றி ஒரே உறையில் போட்டு வழங்குகின்றனர். இதனால் கல்வியறிவு அற்றவர்கள் முறையாக மருந்துகளை எடுத்துக்கொள்ள இயலாத நிலை உருவாகியுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ளாவிட்டால் நோய் குணமாக வாய்ப்பில்லை. ஆகவே, இது தொடர்பாக நடவடிக்கை கோரிய போது, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர், அச்சிட்ட கவர்களுக்காக மட்டும் ஆண்டொன்றுக்கு 6 லட்ச ரூபாயை செலவிட வேண்டியிருக்கும் எனத் தெரிவித்தார்.