தமிழ்நாடு

tamil nadu

ஸ்டெர்லைட் ஊழியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து

By

Published : Dec 18, 2021, 11:47 AM IST

ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி அளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் ஊழியர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

ஸ்டெர்லைட் ஊழியர்கள்
ஸ்டெர்லைட் ஊழியர்கள்

மதுரை:ஸ்டெர்லைட் ஆலையின் துணைத்தலைவர் சுமதி உள்பட பலர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவொன்றைத் தாக்கல்செய்திருந்தனர். அதில், "இந்தியாவில் இரண்டாவது கரோனா அலையின்போது ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இந்த அனுமதியானது ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் புதியம்புதூர், சிப்காட்டைச் சேர்ந்தவர்கள் மூன்றாவது கரோனா அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காகத் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்க வேண்டியும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட வலியுறுத்தியும் ஜூலை 27ஆம் தேதி ஆலை முன்பாக கூடியுள்ளனர்.

ஆலை முன்பு கூடியவர்கள் மீது சிப்காட், புதியம்புதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படக் கூடாது என்னும் நோக்கிலேயே கூடினர். ஆகவே, இந்த வழக்கை விசாரணை செய்ய இடைக்காலத் தடைவிதிக்கவும், ரத்துசெய்யவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் மீதான வழக்குகளை ரத்துசெய்து உத்தரவிட்டார்.

அத்தோடு, மதுரைக்கிளையில் வழக்கை ரத்துசெய்யுமாறு மனு தாக்கல்செய்தவர்களுக்கு மட்டுமின்றி, வழக்குப் பதியப்பட்ட அனைத்துப் பணியாளர்கள் மீதான வழக்குகளையும் ரத்துசெய்து, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மதுக்கடையை மாற்றக் கோரிய வழக்கு: அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details