தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 23, 2019, 9:32 AM IST

ETV Bharat / city

டாஸ்மாக் கடைகள் விவகாரம்! கேள்விகளால் துளைத்தெடுத்த உயர் நீதிமன்றம்

மதுரை: டாஸ்மாக் கடைகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பியதோடு அது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எத்தனை? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை அழகர்கோவில் நாயக்கன்பட்டி எம்.ஏ.வி.எம்.எம். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சரவணன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"நாயக்கன்பட்டியில், எம்.ஏ.வி.எம்.எம். பாலிடெக்னிக் கல்லூரி, போதை மறு வாழ்வு மையம் செயல்படுகிறது. எங்கள் கல்லூரியில் 1025 மாணவர்களும், 130 மாணவிகளும் பயில்கின்றனர். இங்குள்ள விடுதியில் 120 மாணவர்கள் தங்கியுள்ளனர். மறுவாழ்வு மையத்தில் 60 நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில், போதை மறுவாழ்வு மையத்தின் அருகிலேயே டாஸ்மாக் கடை திறக்க, அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். குடி போதையிலிருந்து மீட்பவர்களுக்கான மறுவாழ்வு மையம் அருகே டாஸ்மாக் கடை திறப்பது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் இம்மையம் அருகே டாஸ்மாக் கடை, மதுபான கூடம் திறக்கவோ, வேறு இடங்களிலிருந்து இடமாற்றம் செய்யவோ கூடாது. அப்படி அனுமதி பெற்றிருந்தால் அதற்குத் தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு, எம்.ஏ.வி.எம்.எம். பாலிடெக்னிக் கல்லூரி அருகே டாஸ்மாக் கடை திறக்கும் விவகாரத்தில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டனர். அதாவது வேறு இடத்திலிருந்து மாற்றச்செய்து, இங்கு எந்தத் கடையையும் கொண்டு வரக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், மதுரை மாவட்டத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன? சட்டவிரோத மதுபான கூடங்கள் எத்தனை உள்ளன? போதை நபர்களின் தொல்லைகளைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்களில் சுகாதாரத்தைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் பின்னர் விசாரணையை ஆகஸ்ட் ஆறாம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details