தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 9, 2021, 10:13 PM IST

ETV Bharat / city

குடிமராமத்து பணிகளின் விவரங்களை பிரத்யேக இணையதளத்தில் வெளியிட உத்தரவு!

மதுரை: தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய குடிமராமத்து பணிகளை அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ளும் விதமாக இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

high court madurai bench
உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை

மதுரை சேர்ந்த வழக்கறிஞர் அன்புநிதி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ஆறு, ஏரி, குளங்களை ஆழப்படுத்துவது, கரைகளை பலப்படுத்துவது, தூர்வாருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக குடிமராமத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு 110 விதியின் கீழ் ஊரகப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக ரூ.1,250 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

தற்போது போதுமான அளவு மழை பெய்திருப்பினும், தமிழ்நாட்டின் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பவில்லை. இதற்கு வாய்க்கால்கள், வரத்துக்கால்வாய்கள், கண்மாய்கள் போன்றவை முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாததே காரணமாகும். எனவே தமிழ்நாட்டின் அனைத்து நீர்நிலைப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகள், அவற்றின் சர்வே எண், ஒதுக்கப்படும் நிதி, பணிக்காரணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனைத்து பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் விதமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் குடிமராமத்து பணி என்பது ரகசிய பணி அல்ல. ஒரு பணியில் வெளிப்படைத்தன்மை இருந்தால், அங்கு ஊழல் என்பது குறைக்கப்படும்.

எனவே மனுதாரரின் கோரிக்கையான குடிமராமத்து பணிகள் குறித்த விவரங்களை அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ளும் விதமாக, புதிதாக இணையதளம் ஒன்றைத் தொடங்கி அதில் முழுவிவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த உத்தரவை 12 வார காலத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதில், குடிமராமத்து பணிகள் நடைபெறுவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம், பணி முடிவடைந்த பின் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திருவையாறு ஓதவனேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கக் கோரி வழக்கு

ABOUT THE AUTHOR

...view details