தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 1, 2020, 7:47 AM IST

ETV Bharat / city

சீனாவிலிருந்து தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்கக்கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை: கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவிலுள்ள தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

corona virus issue
Highcourt Madurai bench

மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த சமய செல்வன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், ”நான் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தில் இளைஞர் அமைப்புச் செயலராக உள்ளேன். தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக ஏராளமானோர் சிங்கப்பூர், சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ஓட்டுநர் உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

கொரோனா வைரஸ் சீனாவின் நகரங்களில் பரவியதில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இதுவரை 3 ஆயிரம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஊடகங்களில் சீனாவில் வெகுவிரைவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சீனாவில் இருக்கும் சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சிரமத்துக்கு ஆளாக வாய்ப்புள்ளது. இது தொடர்பாக அங்கிருப்பவர்களும் அவரவர் குடும்பத்தைத் தொடர்புகொண்டு அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, சீனாவில் இருக்கும் தமிழர்கள் பாதுகாப்பான முறையில் தாயகம் திரும்புவதை உறுதிப்படுத்தவும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதை உறுதிப்படுத்தி உத்தரவிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் துரைச்சுவாமி , ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 18ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details