மதுரை: உடல் நலக்குறைவால் மறைந்த தேமுதிக நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஜூன்.1) மதுரை வந்தார்.
அப்போது மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பெட்ரோல், டீசல், சிலிண்டர் உள்ளிட்டவையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால், பொதுமக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது.
மாநிலம் தழுவிய போராட்டம்
இதனைக் கண்டித்து தேமுதிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 5ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். தேமுதிகவைப் பொறுத்தவரை வெற்றியைக் கண்டு ஆணவப்படுவதோ, தோல்வியைக் கண்டு துவண்டுவிடுவதோ கிடையாது.
முதலமைச்சர் உடனான நட்புறவு
எங்களது திருமணம் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனான நட்புறவு என்றைக்குமே இருக்கும்.
ஸ்புட்னிக் தடுப்பூசியின் ஆய்வு முடிவுகள் திருப்திகரமாக இருக்கலாம்.
அதனை இறக்குமதி செய்வது தமிழ்நாடு அரசின் முடிவாகும். நமது நாட்டு மக்களுக்கு எந்தத் தடுப்பூசி வேண்டும் என்பதை அரசாங்கம்தான் முடிவு செய்ய வேண்டும். சசிகலா, அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசிவருவது அக்கட்சியின் தனிப்பட்ட விஷயம்.
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. உள்ளாட்சித்தேர்தல் தேதி அறிவித்த பின்பு கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி தேமுதிக கட்சியின் நிலைப்பாட்டைத் தலைமை அறிவிக்கும்" என்றார்.
இதையும் படிங்க:விரைவில் தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம்