தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை அருகே கிபி.18ஆம் நூற்றாண்டு செப்பேடுகள் கண்டுபிடிப்பு! - தொல்லியல் செய்திகள்

மதுரை அருகே, கி.பி. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, கோயில் கட்டுவது குறித்தும், காவலாளிகள் குறித்தும் விளக்கக் கூடிய மூன்று செப்பேடுகள், தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜனால் கண்டறியப்பட்டுள்ளது.

18th century copper plates
copper plates

By

Published : Dec 5, 2020, 5:01 PM IST

மதுரை: மதுரை மாவட்டம் கருமாத்தூருக்கு அருகேயுள்ள குக்கிராமம் கரிசல்பட்டி. இங்கு, தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன், கி.பி., 17,18ஆம் நூற்றாண்டை சேர்ந்த மூன்று செப்பேடுகளை கண்டறிந்துள்ளார்.

இந்த செப்பேடுகள் குறித்து ஆய்வாளர் காந்திராஜன் கூறுகையில், மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து திடியன் செல்லும் பழைய வணிக சாலையில் அமைந்துள்ளதுள்ள ஊர் கரிசல்பட்டி. இங்குள்ள சோலை தேவர் என்ற வீரபுத்திர கோடாங்கியிடம் செப்பேடுகள் இருப்பதாக அறிந்து, அவரை சந்தித்தேன். அச்செப்பேடுகளை, பூசை அறையில் வைத்து அவரது முன்னோர்கள் பாதுகாத்து வந்துள்ளனர்.

சுமார் 1 அடி நீள அகலத்துடன் உள்ள இச்செப்பேடுகளில், ஒரு பக்கத்தில், 40 வரிகளில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் காலம் சுமார் 17,18ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். இந்தச் செப்பேடுகளில், நான்கு வெவ்வேறு செய்திகள் இடம் பெற்றுள்ளன.

முதலாவது, கருமாத்தூரில் உள்ள கலியுக சிதம்பரேஸ்வர் கோயிலில் இருந்த கருவறைக்கு முன்பாக புதிய முன்மண்டபம் கட்டுவதற்கான ஒப்பந்தம் மற்றும் கோயிலுக்கு கொடுக்கப்பட வேண்டிய உரிமைகள் குறித்து கூறப்பட்டுள்ளது. இதற்கான குழுவில் தெய்வ பெருமாள் பூசாரி, சேர்மதேவன் வகையறாவைச் சேர்ந்த இராமணாதேவன், ஆண்டித்தேவன், எழும்பதேவன் வகையறா கலுவத்தேவன், குப்பணதேவன், சிலுக்கத்தேவன் கருத்தாஞ்செட்டி, சோலைத் தேவன், கருத்தாஞ்செட்டி, மற்றும் தேவங்க பெருமாள் ஆசாரி ஆகிய ஒன்பதும் பேரும் இருந்துள்ளனர். இந்த செய்தியின் வாயிலாக, வெவ்வேறு இனக்குழுக்கள் சேர்ந்து கோவில் வழிபாட்டில் ஈடுபட்டதை அறிய முடிகிறது.

இரண்டாவதாக, கண்ணனூர், கருமாத்தூர், வடக்கம்பட்டி, விக்கிரமங்கலம், பெருமாள் கோயில்பட்டி, புள்ளநேரி போன்ற கிராமங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட காவலாளிகளையும், அவர்கள் சார்ந்த வகையறா குறித்தும் விரிவான செய்திகள் உள்ளன.

செப்பேடுகள்

மூன்று பேர் ஏதோ காரணத்திற்காக காவலாளிகளால் கொல்லப்பட அதற்கான தண்டனையாக சர்க்கார், 600 பொன் அபராதம் கட்ட உத்தரவிட்டுள்ளது. காவலாளிகளின் உறவினர்கள், மேற்படி பொன்னை அபராதமாகக் கொடுத்து, அவர்களை மீட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, களவு போன மாடுகளை மீட்பது தொடர்பாக, இரு காவல்காரர்களுக்குள் நடந்த சண்டையில் ஒருவர் கொல்லப்பட்ட செய்தி இடம்பெற்றுள்ளது.

நாலாவதாக, தொட்டயங்கோட்டையில் காவல் பணியின்போது நடந்த பூசலில், ஜமீனைச் சேர்ந்த ஒருவரும், காவலாளி ஒருவரும் கொல்லப்படுகின்றனர். இதனால் இறந்துபோன ஜமீனைச் சேர்ந்தவரின் மனைவி பொம்மம்மாளும், இறந்துபோன காவலாளியின் மனைவியும் தீக்குழி பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து மேற்படி, கோயிலுக்கு நடக்க வேண்டிய முதன்மை, தீர்த்தம், திருநீரு வழங்குவதற்கான உரிமையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி வரிசையாக சோமதேவன், எழும்பதேவன், கருத்தாஞ்செட்டி, சோலைத்தேவன், தேவங்க பெருமாள் ஆசாரி வகையறாக்கள் இருந்து வருகின்றனர். இவர்களது உருவ சிற்பங்கள் அங்குள்ள கோயில் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளது என்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன.

இந்த செப்பேடு வெகுதானிய ஆண்டு, மாசி மாதம் 27ஆம் தேதி தேவங்க பெருமாள் ஆசாரி என்பவரால் எழுதப்பட்டுள்ளது. இதற்கு சாட்சியாக தெய்வப்பெருமாள் பூசாரி, யாற்றாமனா தேவன், ஆண்டித்தேவன். கலுவத்தேவன். குப்பணதேவன், சிலுக்குத்தேவன், கருத்தான் செட்டி மற்றும் சோலைத்தேவன் ஆகியோர் இருந்துள்ளனர் என்ற செய்தியும் இந்த செப்பேடுகளில் இடம் பெற்றுள்ளன. இதன் வாயிலாக அந்தக் கால சூழல்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது" என்கிறார்.

இதையும் படிங்க:பழமையான கல்வெட்டுகளைப் பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது - நீதிமன்றம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details