தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் பனை மரங்களை நடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் பனை மர விதைகள் விதைக்கப்பட்டன. இந்த அமைப்புகளுக்கு விருது வழங்கும் விழா மற்றும் இயற்கை பனை பாதுகாப்பு கருத்தரங்கம் ஈரோடு கங்காபுரத்தில் உள்ள டெக்ஸ்வேலி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன், சென்னை விமான நிலைய இயக்குநர் விவேகானந்தன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். ஈரோடு சிறகுகள், அன்பின் அறம் செய், சோலைவனம், ஓர் குடும்பம் ஓர் உலகம் ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குப் பனை விதைகளை நட்டதற்காக விருதுகள் வழங்கப்பட்டன.