ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் நடமாடுவதும், சாலையைக் கடந்து செல்வதும் வழக்கம்.
சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் வாகனத்தை மெதுவாக இயக்குமாறும், வனத்துறையினர் ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகளும் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று(அக்.17) அதிகாலை சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கஹள்ளி கிராமம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தார் சாலையில் சிறுத்தை இறந்து கிடப்பதை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக, தகவல் அறிந்த ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா தலைமையில், வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சாலையில் இறந்து கிடந்த சிறுத்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இரவு நேரத்தில் சிறுத்தை சாலையைக் கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழந்தது தெரியவந்தது. சிறுத்தை மீது மோதிய வாகனம் குறித்து மகாராஜன்புரம் வன சோதனைச்சாவடியில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வனச்சாலையில் அதிவேகத்தில் வாகனங்களை இயக்கி, வனவிலங்குகள் மீது மோதி உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க:2003இல் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட முருகேசனின் தாய் மீது தாக்குதல் - 7 பேர் மீது வழக்கு