தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்... மருத்துவமனைகளுக்கு சம்மன் - சிறுமியின் கருமுட்டை

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு மருத்துவமனை நிர்வாகனத்தினருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்
சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்

By

Published : Jun 4, 2022, 11:07 PM IST

Updated : Jun 10, 2022, 5:05 PM IST

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், தனக்கு 3 வயதில் பெண் குழந்தை இருந்தபோது கணவனை விட்டுப் பிரிந்து விட்டார். பின், வேறு ஒருவருடன் இரண்டாவதாக திருமணம் முடித்து வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே இளம்பெண்ணின் மகள் 16 வயதினை எட்டியநிலையில், இரண்டாவது கணவர் அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.இதற்கு தாயும் உடந்தையாக இருந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம்பெண், தனது இரண்டாவது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மூலம் அச்சிறுமியின் பெயர் மற்றும் வயதை ஆதாரில் போலியான ஆவணங்கள் மூலம் தயாரித்துக் கொண்டு ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிறுமியின் கருமுட்டையை 8 முறைக்கு மேல் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதற்கிடையே சிறுமியின் வளர்ப்புத்தந்தை, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். இவர்களின் கொடுமை தாங்க முடியாமல் தவித்த சிறுமி இவர்களிடம் இருந்து தப்பித்து சேலத்தில் உள்ள நண்பர் மூலமாக, உறவினர் வீட்டுக்குச் சென்று, ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதனையடுத்து, இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் தாய் , அவரது இரண்டாவது கணவர்,மற்றுமொரு இடைத்தரகர் பெண், ஆவணங்களை தயாரித்து கொடுத்த நபர் ஆகிய 4 பேரையும் போக்சோ சட்டம், போலியான ஆவணங்களைத் தயாரித்துக்கொடுத்தல் எனப் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சிறுமியின் கருமுட்டையை வாங்கி ஈரோடு சுதா கருத்தரிப்பு மையம், பெருந்துறை ராம் பிரசாத் மருத்துவமனை நிர்வாகம் ஆகியவற்றை விசாரணைக்கு ஆஜராக காவல் துறையினர் சம்மன் வழங்கியுள்ளனர். எந்த எந்த நாட்களில் சிறுமி மருத்துவமனைக்கு வந்து சென்றார் என்ற உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் முதற்கட்ட விசாரணை நடத்திய நிலையில், ஜூன் 5இல் சென்னையில் இருந்து வரும் குழுவினர் விசாரணை நடத்தி அளிக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

Last Updated : Jun 10, 2022, 5:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details